Monday, November 30, 2015

“ அப்பர் ஸ்வாமிகளைப் பற்றி எழுது ! “ - II



பேராசிரியரை ஸ்ரீபெரீவா சந்நிதானத்தில் கண்டதும்  ஒரு கணம் திகைத்தேன்.. 

மேனா அருகில் நின்ற திருக்கோலத்தில் இருந்த ஸ்ரீபெரியவா மெதுவா முன்னால்  நடந்து வந்தார்கள்..

பேராசிரியர் தகப்பனார் சிவஸ்ரீ.அருணைவடிவேல் முதலியாருக்கு சதாபிஷேகம் தொண்டைமண்டல  ஆதீனத்  திருமடத்தில் அன்று நடைபெறவிருப்பதையும் அதற்கு முன்னர் ஸ்ரீபெரியவாளின் அனுக்ரஹம் பெற்றுக் கொள்ள வேணுமென்று அவர்கள் அங்கு பாதகாணிக்கைகளுடன் வந்திருப்பதையும் அணுக்கத் தொண்டர் தெரிவித்தார்..

சிவப்பழமாக விளங்கிய முதலியாரைக்  கனிவுடன் நோக்கிய ஸ்ரீபெரீவா தன்  இரு கரங்களையும் மார்புறத் திருப்பி வைத்தபடி அவருக்கு ஸ்ரீமடவழக்கப்படி ஸாதரா சார்த்தி மரியாதை பண்ண உத்தரவாயிற்று.. பரமசாம்பவரான  முதலியாருக்கு ஸ்ரீபெரீவா செய்வித்த வித்வத் ஸன்மானங்களை அவரும் மிகுந்த பணிவுடன் ஏற்றுக்கொண்டார்.

இது நடந்து முடிந்தவுடன்.. 

என்னை நோக்கிய ஸ்ரீபெரியவா "அப்பர் ஸ்வாமிகளைப் பத்தி எழுது!"  என்று மட்டும் சொல்லி விட்டு சட்டென்று உள்ளே  சென்றுவிட்டார்கள்..

இதை கண்ணுற்ற பேராசிரியரும் "ஸ்ரீபெரியவா உத்தரவாகி விட்டபடியால் வேறெதைப் பற்றியும் எழுத வேண்டாம்... அவர்கள் திருவுளப்பாங்கின் வண்ணம்   நன்கு முயன்று அப்பர் ஸ்வாமிகள் அருள்வரலாறு  மற்றும் உரிய  திருமுறைப் பாடற் குறிப்புகளுடன் எழுதி எடுத்துக்கொண்டு  வா" என்று சொல்லிச் சென்றார்..


ஸ்ரீபெரியவாள் அருளாணைப்படியே கட்டுரை தயாரானது..

கம்பன் கழகக் கட்டுரைப் போட்டிக்கான நாளும் வந்தது...

கட்டுரைக்கான குறிப்புகளை  நன்றாக மனசில் வாங்கி கொண்டு ஸ்ரீபெரீவா திருவுருவை நமஸ்கரித்துப் போட்டி நடைபெறும் ராணிசீதை மன்ற அரங்கிற்குச்  சென்றேன்..

பத்து மணிக்கு போட்டி தலைப்பு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்..

என்னைத் தவிர்ந்த போட்டியாளர்கள் அனைவரும் மூன்று தலைப்புகளுக்கும் கட்டுரை எழுதத் தயாராக வந்திருந்தனர். அப்பர் ஸ்வாமிகளைப் பற்றி எழுதும்படி ஸ்ரீபெரீவா உத்தரவிட்டபடி மூன்றில் எந்தத் தலைப்பானாலும் அப்பர் ஸ்வாமிகளைப் பற்றி  மட்டுமே எழுதும் முடிவில் அமர்ந்திருந்தேன்..

சரியாக மணி பத்து..

அரங்கத்தின் மேடை மீது தோன்றிய  கம்பன் கழகச் செயலாளர் " பெரியபுராணக் கட்டுரைப் போட்டி.... தலைப்பு...." என்று சொல்லி சில நொடிகள் தாமதித்து  "..உடலால் தொண்டாற்றியவர்!" என்று  அறிவித்து முடித்ததுதான்.. எனக்குத் தாங்க முடியாத ஆச்சரியம் ஒருபுறம்.. ஆனந்தம் மறுபுறம்.. 

உடலால் தொண்டாற்றிய அடியவர்களுள் முதன்மையானவர்  அப்பர் ஸ்வாமிகள் .. ஸ்ரீபெரியவா  வாக்கு ஸத்யம்..  அவர்கள் உத்தரவானபடி எழுத வேணும்.. என்பதை  மனத்தில் இருத்தியபடி

  " நிலை பெறுமாறு எண்ணுதியேல், நெஞ்சே! நீ
        வா! நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு,
  புலர்வதன் முன் அலகிட்டு, மெழுக்கும் இட்டு,
         பூமாலை புனைந்து ஏத்தி, புகழ்ந்து பாடி,
  தலை ஆரக் கும்பிட்டு, கூத்தும் ஆடி, “சங்கரா,
      சய! போற்றி போற்றி!என்றும்,
    “அலை புனல் சேர் செஞ்சடை எம் ஆதீ!
    என்றும், “ஆரூரா!என்று என்றே, அலறா நில்லே!."

என்ற அப்பர் ஸ்வாமிகளின்  திருவாரூர்  திருத்தாண்டகத்தில் தொடங்கி "சங்கரா,  ய! போற்றி போற்றி! என்று ஸ்ரீபெரிவாளை நினைந்தபடி வேகமாகக் கட்டுரையை எழுதி முடித்தேன்..

சிலநாட்கள் கழிந்தன..

தமிழ்த்துறையில் பேராசிரியர் அழைப்பதாக அலுவலக உதவியாளர் வகுப்பிற்கு வந்து என்னை அழைத்துப் போனார்..

பேராசிரியர் மிகுந்த முக மலர்ச்சியுடன் அங்கு அமர்ந்திருந்தார் .. வணக்கம் தெரிவித்து அவர் அருகில் சென்றேன்..  கம்பன்  கழகக் கடிதம் என்று சொல்லிக் கையில் கொடுத்தார்..

பெரியபுராணக் கட்டுரைப் போட்டிக்கான முடிவுகள் பற்றிய அறிவிப்பு அதில் இருந்தது.. மூச்சைப் பிடித்துப் படித்தேன்..

திருப்பனந்தாள் ஆதீனத்தார் வழங்கும் முதற்பரிசு ரூபாய் 500/- எனக் குறிப்பிட்டு அதற்கருகில்   என்பெயர்  எழுதப்பட்டிருந்தது.. அன்றைய தினம் மாலை மயிலை ஏவிஎம் ராஜேஸ்வரி அரங்கில் நடைபெறும் கம்பன்  விழாவில் பரிசு தரப்படும் என்றும் அதில் கண்டிருந்தது.

ஸ்ரீபெரிவாளை மனதிற்குள் நினைத்துகொண்டேன்.. பேராசிரியரை நன்றியுடன் நோக்கினேன்..

"அதான் அன்னிக்கே உங்க யஜமான் அப்பர் ஸ்வாமிகளைப் பத்தி எழுதுன்னு உத்தரவு பண்ணிட்டாங்களே.. அவங்க வாக்குதான் என்னிக்கும் சத்தியம்!" என்று வியந்து சொன்னவர்.. 
சற்று யோசித்து..                      

" ஈசர் மிழலை இறையவர்பால் 
                   இமையப் பாவை திருமுலைப்பால்
 தேசம் உய்ய உண்டவர்தாம்  
                   திருமா மகனார் ஆதலினால்
 காசு வாசி யுடன்பெற்றார் 
                   கைத்தொண் டாகும் அடிமையினால்
 வாசி யில்லாக் காசுபடி  
                   பெற்று வந்தார் வாகீசர் "

என்ற  திருநாவுக்கரசு நாயனார் புராண வரிகளைத் தன்னை மறந்து சொன்னார் ...

[உமையம்மை திருமுலைப்பால் அளித்தும்திருவீழிமிழலை ஈசனிடமிருந்து  மாற்றுக் குறைந்த  காசினையே  திருஞான சம்பந்தர் பெற்றார். ஆனால்  கைத்திருத்தொண்டு செய்கின்ற அடிமை ஆதலால் குற்றம் இல்லாத காசினைத் திருநாவுக்கரசருக்கு இறைவன் அளித்தார் என்பது  இதன் பொருள்]

"எல்லாம் பெரியவங்க திருவருள்..! என்னிக்கும் அவங்க  கைங்கர்யமாகிற  'கைத்தொண்டாம் அடிமைநிலை' என்னும் பேறு உனக்கு கிடைக்கும்!" என்று என்னை வாழ்த்தி  அனுப்பிவைத்தார்..


பரிசினைப் பெற்று உடன் காஞ்சீபுரம் சென்று ஸ்ரீபெரியவா ஸ்ரீபாதங்களில் .பணிந்து விபரம் தெரிவித்துக் கொண்டேன். ஸ்ரீபெரீவாளின் திருமுகம் மலர்ந்தது. திருமார்பில் திருக்கையைச்  சார்த்தி நன்றாகத் தெரியும்படி அபய ஹஸ்தம் காட்டி அருளினார்கள்... 

எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும் கைத்தொண்டாம் அடிமை நிலை எங்களுக்கு நிலைத்திருக்க வேணுமென நினைத்தபடியே தாழ்ந்து பணிந்தேன்..  

Thursday, November 26, 2015

திருவாரூர் தேர் உருவகம் - II

                                   





திருவாரூர் தேர் உருவகம் - I



1976ம் வருஷம்…
திருவாரூரிலிருந்து எங்கள் பெற்றோருடன் விடுமுறைக்காகச் சென்னைக்குப் போயிருந்தோம்… சென்னையில் நிறைய இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். நடுவில் ஒருநாள் புதிதாகக் கட்டப்பட்டிருந்த வள்ளுவர்கோட்டத்தைப் பார்க்க அழைத்துப் போனார்கள்…
குழந்தைகளான நாங்கள் வள்ளுவர்கோட்டத்தைச் சுற்றிச்சுற்றி வந்தோம்.
திருவாரூரில் ஸ்ரீதியாகராஜஸ்வாமி ஏறி வரும் பெரிய தேர் போலவே அச்சு அஸலாக வள்ளுவர்கோட்டம் இருப்பதைப் பார்த்து எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சர்யம்..!
ஸ்வாமி வரும் பெரிய தேரை இழுக்கும் பெரிய குதிரைகள், யாளி, வடங்கள் என்று சிலதுகள் மட்டும் இல்லை. மற்றபடி திருவாரூர்த்தேரை அப்படியே அலாக்காகத் தூக்கிகொண்டுவந்து சென்னையில் வைத்ததுபோல இருந்தது…!
தேருக்கு மேலே ஜடாமுடியுடன் தாடி வைத்துக்கொண்டு யாரோ ஒரு ஸ்வாமிகள் உட்கார்ந்திருப்பதாக நினைத்தோம்…
எங்களை அழைத்துப்போன பெரியவர்கள் அது திருவள்ளுவர் என்று சொல்லி சுற்றிலும் பொறிக்கப்பட்டிருந்த திருக்குறளைக் காட்டினார்கள். நம் ஊர்க்காரரான கருணாநிதிதான் அதைக் கட்டியிருப்பதாகச் சொன்னார்கள் .
“இங்கு வைத்திருக்கும் எந்த போர்டிலும் திருவாரூர் தேர் பற்றி இல்லை. விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் சிறு படங்கள் மற்றும் புஸ்தகங்களும் திருவாரூர்த் தேர் பற்றிய எந்தவிதமான ரெபரன்சும் இல்லாமல் இருக்கின்றன. இதைக்கட்டிய கருணாநிதியையும் திறப்பு விழாவுக்குக் கூப்பிடலையாம். இனிமேல் இது திருவாரூர் தேர் என்று யார்தான் பெருமையுடன் அடையாளம் காட்டப்போகிறார்களோ தெரியவில்லை…” இப்படியே ஒரு அங்கலாய்ப்புடன் எங்களை அழைத்துப்போன பெரியவர்களின் பேச்சு தொடர்ந்தது…
ஓரிரு நாட்கள் கழித்து காஞ்சீபுரம் ஸ்ரீமடத்திற்குச் சென்றோம்….
அப்போது ஸ்ரீமஹாபெரியவாள் அருகில் ஒரு கிராமத்து சிவாலயத்தில் (சிவாஸ்தானம் என்று நினைவு) இருந்தார்கள்…
சாயங்கால நேரம்…
ஒரு கிணற்றடிக்கப்பால்… அரையிருட்டில் ஸ்ரீபெரியவாள் தரிசனம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.
பெற்றோர் மற்றும் குழந்தைகள் சந்நதியில் நேர்வரிசையாக நின்றோம்.
கைங்கர்யம் செய்பவர்: “ஆடிட்டர் வெங்கட்ராமையர் பையன், மாட்டுப்பெண் குழந்தைகளுடன் வந்திருக்கிறார்கள். வந்தனம் பண்ணுகிறார்கள்”.
ஸ்ரீபெரியவாள்: “எங்கேயிருந்து வருகிறார்கள்?”
குழந்தை: (முந்திக்கொண்டு) “லீவுக்கு மெட்ராஸ்போய்ட்டுத் திரும்பி வரோம்.”
ஸ்ரீபெரியவாள் : “மெட்ராஸில் பார்த்த இடங்களில் எது உனக்கு ரொம்பப்பிடிச்சிருந்தது ? ”
குழந்தை: “வள்ளுவர்கோட்டம் .”
ஸ்ரீபெரியவாள்: “வள்ளுவர்கோட்டம் எது மாதிரி இருக்கு?”
குழந்தை: “எங்கூர் தேர் மாதிரியிருக்கு ”.
ஸ்ரீபெரியவாள்: “அது உங்க ஊர்க்காராளுக்குத் தெரியும். வெளியூர் ஜனங்களுக்குத் தெரியாதே. அதற்கு என்ன பண்ணணும்?”
குழந்தை: “அது எங்க திருவாரூர் தேர் மாதிரி இருக்குன்னு எழுதி வைக்கணும்”.
ஸ்ரீபெரியவாள்: (குழந்தைகளின் தகப்பனாரைப்பார்த்து) வள்ளுவர்கோட்டத்தில் எல்லாரும் படிக்கும்படியாக “திருவாரூர்த்தேர் உருவகம்” என்று ஒரு போர்டு கட்டாயம் எழுதி வைக்கணும். நீ யாரிடமாவது சொல்லி அதற்கு ஏற்பாடு பண்ணு !”.
அன்று ஸ்ரீபெரியவாள் மெல்லிய குரலில் என்னிடம் மெதுவாக ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டு பதில்களை வரவழைத்த விதம் தற்போதும் பசுமையாக என் நினைவில் நிற்கிறது .
இந்த நிகழ்ச்சிக்குப் பிற்பாடு என் தகப்பனார் பலபேரிடம் சொல்லி முயற்சித்தும் வள்ளுவர் கோட்டத்தில் “திருவாரூர் தேர் உருவகம்” என்ற வாசகம் எழுதி வைக்கக்கூடவில்லை….
















Thursday, November 19, 2015

“ அப்பர் ஸ்வாமிகளைப் பற்றி எழுது ! “ - I



1987ம் வருஷம்.. சென்னையில் லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம்.. சென்னைக் கம்பன் கழகத்தாரின் பெரியபுராணக் கட்டுரைப் போட்டி பற்றிய அறிவிப்பு வெளிவந்தது.. தமிழைப் பாடமாக நான் எடுத்துப் படிக்கவில்லை.. ஆனாலும் அக் கட்டுரைப் போட்டியில் பங்கேற்க பெரிதும் விரும்பினேன்.

கம்பன் கழகப் போட்டிகள் சற்று கடினமானவை. தமிழ்நாட்டளவில் போட்டியாளர்கள் வருவார்கள்.. போட்டி அதிகமாக இருக்கும்.. மூன்று தலைப்புகளை முன்கூட்டியே அறிவித்து விடுவார்கள். போட்டி நாளன்று போட்டி தொடங்க அரை மணிக்கு முன்னர் மூன்றில் ஒரு தலைப்பை அறிவிப்பார்கள். அதுவரை போட்டித் தலைப்பை சஸ்பென்ஸாகவே வைத்திருக்கும் ஒரு வித்யாசமான வழக்கம் அங்குண்டு..

பெரிய புராணக் கட்டுரைப் போட்டிக்கு முதற் பரிசாக திருப்பனந்தாள் ஆதீனம் சார்பில் ரூபாய் ஐநூறும் அறிவிக்கப்பட்டிருந்தது !

அப்போது கல்லூரி தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய புலவர் பாலறாவாயன் அவர்களைச் சந்தித்தேன்.. ன்று மாலை தமிழ்த் துறைக்கு வரும்படி சொன்னார்.

ருக்கு “ஆரூரன்” (திருவாரூக்காரன்) என்பதால் என்னிடத்தில் கொஞ்சம் பிரியம் உண்டு..

பேராசிரியர் பாலறாவாயன்,  முதுபெரும் சைவ சித்தாந்த வித்வான் அருணைவடிவேல் முதலியார் அவர்களின் புதல்வர்.. காஞ்சீபுரத்தில் உள்ள தொண்டை மண்டல ஆதீனத்தின் அடியார் திருக்கூட்டத்தை சேர்ந்தவர்.. (பாலறாவாயன் என்ற பெயருக்கு பால் மணம் மாறாத வாயை உடைய திருஞானசம்பந்தர் என்று பொருள்.. பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் ஸ்வாமிகளுக்கும் இயற்பெயர் பாலறாவாயர்தான்..)

அந்த வருஷம், சென்னைக் கம்பன் கழகத்தின் பெரியபுராணக் கட்டுரை போட்டிக்கு மூன்று தலைப்புகள் தரப்பட்டிருந்தன.. 

முதல் தலைப்பு ..“உள்ளத்தால் தொண்டாற்றியவர்”..இரண்டாவது தலைப்பு உரையால் தொண்டாற்றியவர்”. “உடலால் தொண்டாற்றியவர்" என்பது மூன்றாவது தலைப்பு.

அன்று வெள்ளிக் கிழமை..

மாலை வகுப்புகள் முடிந்தவுடன், கட்டுரைப் போட்டித் தலைப்புகளுடன் தமிழ்த் துறைக்குச் சென்றேன். அங்கிருந்த பேராசிரியர் இத் தலைப்புகள் மூன்றையும் பார்த்தார். 

என்னிடம் திருமுறைகள் மற்றும்  சைவ சித்தாந்தம் விஷயமாக சில கேள்விகளை போட்டார்.. என் பதில்கள் ஓரளவிற்கு அவருக்கு த்ருப்தி அளித்திருக்கலாம்.. கடைசியில் போட்டிக்கு என்னை ஆற்றுப்படுத்த ஒத்துக்கொண்டார்.. அதுவே எனக்குப் பெரும் நிறைவைத் தந்தது..

பெரியபுராணக் கதைச்சுருக்கத்தை வாசித்துப் பார்த்து தலைப்புகளுக்கேற்ற அடியார் வரலாற்றைத் தேர்ந்தெடுத்து, தக்க பாடல் மேற்கோளுடன் குறிப்பெடுத்துக்கொண்டு  திங்கட்கிழமை தமிழ்த்துறையில் உள்ள அவரது அறைக்கு வரும்படியும் சொல்லிக் கிளம்பினார்.. 

பேராசிரியரிடம் விடைபெற்றுக் கொண்டு ஹாஸ்டல் அறைக்குத் திரும்பினேன்..

பெரியபுராண புஸ்தகத்தைக் கையில் எடுத்துப் பிரித்துப் பார்த்தேன்..

ஒவ்வொரு தலைப்புக்கும் ஒரு டஜனுக்குக் குறைவில்லாமல் அடியார்கள் தென்பட்டார்கள்.. இவர்களில் மணீயாக மூன்று பேரை மட்டும் பொருக்கி எடுக்க முயன்றேன்.. அந்த ஜீவரத்னக் குவியலில் எதைத் தனியாகத் தேர்ந்தெடுப்பது..? நேரம்தான் சென்றது.. அனைவருமே ஒவ்வொரு விதத்தில் பொருத்தமானவர்களாகவே என் மனத்திற்குத் தோன்றினர். இப்படியே இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது..

பிறகு, ஸந்த்யாவந்தனம் பண்ணிவிட்டு ஸ்ரீபெரீவா திருவுருவப் படத்துக்கு நமஸ்காரம் பண்ணியபோது.. காலேஜ்தான் ரெண்டு நாள் லீவாச்சே.. நேரா காஞ்சீபுரம் போய் ஸ்ரீபெரீவாளிடம் கேட்டு அவாள் உத்தரவுபடி செய்யலாமே! என்று தோன்றியது..

அதிகாலை கிளம்பி காஞ்சீபுரம் ஸ்ரீமடத்திற்கு வந்து சேர்ந்தேன்….

ஓரு மணி ஜபம் முடிந்து சற்று நேரம் ஆகியிருக்கலாம்.. ஸ்ரீபெரீவா மேனாவுக்கருகில் நின்றபடி தரிசனம் தந்துகொண்டிருந்தார்கள்..

அருகிலிருந்த அணுக்கத் தொண்டர் என் பாட்டனார் பெயரைச் சொல்லி, அவருடைய பேரன் என்று சொன்னபோது.. “ எங்கே வந்தாய்?” என்பது போல ஸ்ரீபெரீவா என் பக்கம் திருக்கண் சார்த்தினார்கள்.. 

உடனே சென்னைக் கம்பன் கழகத்தினர் நடத்தும் போட்டிகளுள் ஒன்றான பெரிய புராணக் கட்டுரைப் போட்டி பற்றி ஸ்ரீபெரீவாளிடம் விக்ஞாபனம் செய்து கொண்டேன்..

“எதைப் பத்தி எழுதணும்?” என்று ஸ்ரீபெரீவா  ரத்னச் சுருக்கமாகக் கேட்டார்கள்.. உள்ளத்தால் தொண்டாற்றியவர், உரையால் தொண்டாற்றியவர், உடலால் தொண்டாற்றியவர் என்று மூணு தலைப்பு கொடுத்திருக்கா.. அரை மணி முன்னாடிதான் இதில் ஒண்ணைச் சொல்வாளாம்.. அதைப் பத்தி எழுதணும்” என்று பயந்தபடி சொன்னேன்..

மேற்கொண்டு ஏதும் சொல்லாமல் இருந்த  ஸ்ரீபெரிவா, சில நிமிஷங்கள் கழித்து வலப்புறமாகத் திரும்பி பார்த்தார்கள்..

அங்கே... க்யூ வரிசைக்கு சற்று தள்ளி...
பேராசிரியர் பாலறாவாயன் தன் பெற்றோருடன் வந்து ஸ்ரீபெரீவா தரிசனத்திற்காக வந்து நின்றார்..

                                                                                                                            
                                                                                                                            தொடரும்...

Monday, November 16, 2015

திருவாரூர் ஸ்கந்த புராணக் கல்வெட்டு





திருவாரூர் ஸ்ரீத்யாகராஜஸ்வாமி திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தின் கீழ்ப்புறம்  ஆயிரக்கால் மண்டபத்தின் அருகில் உள்ளது சங்க தீர்த்தம் என்னும் பொய்கை.. 

சங்கன் என்னும் தவசியின்  குஷ்ட ரோகம் இதில் நீராடத்  தீர்ந்தது. சமத்காரன் என்னும் மாமன்னன் முனிவர் சொற்படி இப் புண்ணிய தீர்த்தத்தில் நீராடித் தன் சர்மநோய் நீங்கப் பெற்றான் என்பது புராணச் செய்தி.. 

பாற்குளம் ஒத்த இந்தப் புனித தீர்த்தத்தில் -
" சைத்ர மாதம், வளர் பிறையில், சித்திரை நட்சத்ரத்தில் சந்த்ரன் பிரவேசிக்கும் நேரத்தில்   உண்ணா நோன்பிருந்து பக்தியுடன் நீராடுவோர் குறையா உடலும் தேஜஸும் பெறுவர் . இம்மொழி வாய்மை !" என்று புராண ச்லோக ப்ரமாணம்   காட்டும்  வடமொழி க்ரந்த லிபியிலமைந்த சோழர் காலக் கல்வெட்டு இங்கு பொறிக்கப்பட்டுள்ளது.. 

இக் கல்வெட்டில் காணப்படும்  ச்லோகங்கள் பதிணெண் புராணங்களில் ஒன்றான ஸ்காந்த புராணத்துள் அடங்கியதான நாகரகண்டம் என்னும் பகுதியில், திருவாரூர் ஸ்தல மகிமை கூறும் கமலாலய க்ஷேத்ர மாஹாத்ம்யத்தின் பதினோராவது அத்யாயம்,  38 மற்றும் 39 வது ச்லோகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

புராண ச்லோகங்கள் மட்டுமே பொறிக்கப்பட்டுள்ள இக் கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு  இதன் காலம் கி.பி.12- 13ம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.

வடமொழியிலமைந்த நாகர கண்டத்தின் தமிழ் மொழிபெயர்ப்புகளாக  கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் மறைஞானசம்பந்த முனிவரால்  கமலாலயச் சிறப்பு என்னும் புராண நூலும்,  நிரம்பவழகிய தேசிகர் சீடரான அளகை சம்பந்த முனிவரால்  திருவாரூர்  புராணம் என்னும் நூலும் இயற்றப்பட்டன. 

"  மேன்மை சான்றதோர் காந்த மாபுராணத்தின் விரிந்த
             ஞான மாதவர் புகழ்தரு நாகரகண்டம் " என்று இதனைப் போற்றுவார் அளகை சம்பந்த முனிவர்.

சோழர் காலத்தில் ஸ்தல புராணங்கள் வழங்கியமை பற்றி ஆய்வோருக்கு இக் கல்வெட்டு பெரிதும் உதவும்.




சமீப காலத்திலும் தோல் நோயுள்ளவர்களைச் சங்க தீர்த்தத்தில் நீராடச் சொல்லும் வழக்கம் இவ்வூரிலுண்டு. 

சங்க முனிவர் பெயரால் தோன்றிய இத்தீர்த்தம் தற்போது சங்கு தீர்த்தம் என வழங்குகிறது. 

சில நாட்களுக்கு முன் நடந்த திருப்பணியின்போது சங்குச் சிலை  ஒன்றையும் கோயிலார் இங்கு  வைத்து விட்டனர்..!