Saturday, January 2, 2016

சொல்லும் பொருளும் : 2 - திருவாரூர் கோயிலாக் கொண்டநாளே !




அப்போது திருவாரூர் ஸ்ரீத்யாகராஜஸ்வாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் நடந்து முடிவடைந்திருந்த சமயம்….

திருவாரூர் திருக்கோயில்என்னும் தமிழ்ப் புஸ்தகம் தேவஸ்தானம் சார்பில் வெளிவந்திருந்தது..

அதில் ஆதியில் மனிதர்கள் மண்ணை வழிபட்டார்கள்.. பிறகு மரத்தை வழிபட்டார்கள்.. அப்புறம் பாம்பு வழிபாடு வந்தது.. பிற்பாடுதான் தெய்வங்களை வழிபடலாயினர் என்று நூலாசிரியர் எழுதியிருந்தார்..

இது சரிதானா என்ற ஐயம் எனக்கிருந்தது..

அன்று, இதைப் பற்றி ஸ்ரீபெரீவாளிடம் தெரிவித்துக் கொண்டபோது சற்று நேரம் மவுனமாக இருந்தார்கள்..

பிற்பாடு, நூலாசிரியரின் பெயரைக் கேட்டார்கள்.. சொன்னேன்..

அவன் சைவனா?” என்று வினவினார்கள்..

இருக்கலாம்.. சரியாகத் தெரியவில்லைஎன்றேன்..

சற்று நிமிர்ந்து நேராக என்னைப் பார்த்துக் கணீரென்று    “ஒருவனாய்…” என்று மட்டும் சொல்லி மேற்கொண்டு தொடராமல் சட்டென்று நிறுத்திவிட்டார்கள்….

அருகிலிருந்த அகம்படித் தொண்டர்களான பானாம்பட்டு கண்ணன், பாலு மாமா ஆகியோர்க்குஒருவனாய்என்ற சொல்லின் பொருள் புரியவில்லை..

அதன்பிறகு மேற்கொண்டு ஏதும் பகராமல் ஏன் ஸ்ரீபெரீவா நிறுத்திக்கொண்டார்கள் என்பதன் காரணமும் புரியவில்லை..


சற்று தள்ளியிருந்த எனக்குத் திருவாரூர் திருமூலட்டானரின் தோற்றம் பற்றிய  ரஹஸ்யப் பொருளை ஸ்ரீபெரீவாஒருவனாய்என்று  ஒரே சொல்லில் உணர்த்திவிட்டது அவர்களின் பெருங்கருணையால் புரிந்தது.... உடன் கைகளைச் சிரமேற்குவித்துப் பன்முறை நமஸ்கரித்து எழுந்தேன்.. 


ஸ்ரீபெரீவா மேற்கொண்டு சொல்லத் துவங்கினார்கள்..

அப்பர் ஸ்வாமிகளின் திருவாரூர்த் திருத்தாண்டகத்தில் ஒரு பதிகத்தின் முதலடியே  “ஒருவனாய் என்பது...

ஸ்ரீபெரீவா உணர்த்திய  அப்பர் ஸ்வாமிகளின் திருவாரூர்த்  திருத்தாண்டகம் இதுதான்

ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ

ஓருருவே மூவுருவ மான நாளோ

கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ

காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ

மருவனாய் மண்ணும் விண்ணுந் தெரித்த நாளோ

மான்மறிகை யேந்தியோர் மாதோர் பாகந்

திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ

திருவாரூர் கோயிலாக் கொண்டநாளே. ..1


மலையார்பொற் பாவையொடு மகிழ்ந்த நாளோ

வானவரை வலியமுத மூட்டி யந்நாள்

நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ

நினைப்பரிய தழற்பிழம்பாய் நிமிர்ந்த நாளோ

அலைசாமே அலைகடல்நஞ் சுண்ட நாளோ

அமரர்கணம் புடைசூழ இருந்த நாளோ

சிலையான்முப் புரமெரித்த முன்னோ பின்னோ

திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே2


பாடகஞ்சேர் மெல்லடிநற் பாவை யாளும்

நீயும்போய்ப் பார்த்தனது பலத்தைக் காண்பான்

வேடனாய் வில்வாங்கி எய்த நாளோ

விண்ணவர்க்குங் கண்ணவனாய் நின்ற நாளோ

மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை

மணிதிகழும் அம்பலத்தே மன்னிக் கூத்தை

ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ

அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே3


ஓங்கி உயர்ந்தெழுந்து நின்ற நாளோ

ஓருகம்போல் ஏழுகமாய் நின்ற நாளோ

தாங்கியசீர்த் தலையான வானோர் செய்த

தக்கன்தன் பெருவேள்வி தகர்த்த நாளோ

நீங்கியநீர்த் தாமரையான் நெடுமா லோடு

நில்லாயெம் பெருமானே யென்றங்கேத்தி

வாங்கிமதி வைப்பதற்கு முன்னோ பின்னோ

வளராரூர் கோயிலாக் கொண்ட நாளே4


பாலனாய் வளர்ந்திலாப் பான்மை யானே

பணிவார்கட் கங்கங்கே பற்றா னானே

நீலமா மணிகண்டத் தெண்டோ ளானே

நெருநலையாய் இன்றாகி நாளை யாகுஞ்

சீலமே சிவலோக நெறியே யாகுஞ்

சீர்மையே கூர்மையே குணமே நல்ல

கோலம்நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ

குளிராரூர் கோயிலாக் கொண்ட நாளே5


திறம்பலவும் வழிகாட்டிச் செய்கை காட்டிச்

சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ

மறம்பலவு முடையாரை மயக்கந் தீர்த்து

மாமுனிவர்க் கருள்செய்தங் கிருந்த நாளோ

பிறங்கியசீர்ப் பிரமன்தன் தலைகை யேந்திப்

பிச்சையேற் றுண்டுழன்று நின்ற நாளோ

அறம்பலவும் உரைப்பதற்கு முன்னோ பின்னோ

அணியாரூர் கோயிலாக் கொண்ட நாளே6


நிலந்தரத்து நீண்டுருவ மான நாளோ

நிற்பனவும் நடப்பனவும் நீயே யாகிக்

கலந்துரைக்கக் கற்பகமாய் நின்ற நாளோ

காரணத்தால் நாரணனைக் கற்பித் தன்று

வலஞ்சுருக்கி வல்லசுரர் மாண்டு வீழ

வாசுகியை வாய்மடுத்து வானோ ருய்யச்

சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ பின்னோ

தண்ணாரூர் கோயிலாக் கொண்ட நாளே7


பாதத்தால் முயலகனைப் பாது காத்துப்

பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ

கீதத்தை மிகப்பாடும் அடியார்க் கென்றுங்

கேடிலா வானுலகங் கொடுத்த நாளோ

பூதத்தான் பொருநீலி புனிதன் மேவிப்

பொய்யுரையா மறைநால்வர் விண்ணோர்க் கென்றும்

வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ

விழவாரூர் கோயிலாக் கொண்ட நாளே8


புகையெட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டும்

பூதலங்க ளவையெட்டும் பொழில்க ளெட்டும்

கலையெட்டுங் காப்பெட்டுங் காட்சி யெட்டுங்

கழற்சே வடியடைந்தார் களைக ணெட்டும்

நகையெட்டும் நாளெட்டும் நன்மை யெட்டும்

நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்க ளெட்டும்

திகையெட்டுந் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ

திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே9

ஈசனா யுலகேழும் மலையு மாகி

இராவணனை ஈடழித்திட் டிருந்த நாளோ

வாசமலர் மகிழ்தென்ற லான நாளோ

மதயானை யுரிபோர்த்து மகிழ்ந்த நாளோ

தாதுமலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ

சகரர்களை மறித்திட்டாட் கொண்ட நாளோ

தேசமுமை யறிவதற்கு முன்னோ பின்னோ

திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே10

இப்படி சிவமஹாபுராணம், லிங்கபுராணம் உள்ளிட்ட பல்வேறு புராணங்களிலும் சொல்லப்பட்டுள்ள ஸ்ரீபரமேச்வரனின் பல்வேறு அருட்செயல்களையும் இந்தப் பதிகத்தில் குறிப்பிடும் திருநாவுக்கரசர் முடிவாக ஒவ்வொரு பாட்டிலும் இப் பெருஞ்செயல்களைப் புரிவதற்கு முன்னோ பின்னோ நீர் திருவாரூர் திருத்தலத்தைக் கோயிலாய்க் கொண்டீர் என்று எப்போது சிவபெருமான் திருவாரூர்ப் பூங்கோயிலில் புற்றிடங்கொண்டாராக உறையத்தொடங்கினர் என்று காலநிர்ணயம் செய்ய முடியாமல் உருகிப்  பாடுவதாக இப் பதிகம் அமைந்துள்ளது..

ஸ்ரீபெரீவா தொடர்ந்தார்கள்..

மண்ணை வழிபடத்துவங்கி அப்புறம் மரத்தை வணங்கி பிற்பாடு பாம்பை வழிபட்டு கடைசியாக உருவ வழிபாடு வந்தது என்று வெள்ளைக்காரன் சரியா தெரிஞ்சுக்காமல் சொல்லலாம்..

ஆனால் நாம அது மாதிரில்லாம் சொல்லவே கூடாது..

ஆரம்பத்தில் நம்ப முன்னோர்கள் அபார்ஜின்ஸ் ஆக இருந்தார்கள் பிற்பாடு சிவிலைஸ்டாக மாறினார்கள்னு சொல்றது ரொம்ப தப்பு,..

தேவதைகள் ப்ரார்த்தித்தார்கள் என்பதற்காக பகவான் திருவாரூர்ல கரையான் புற்றில் ஸ்வயம்பு மூர்த்தியாக ஆவிர்பவித்தார் அப்டின்னு திருவாரூர் க்ஷேத்ர புராணத்ல (ஸ்காந்தபுராணம் – நாகரகண்டம் - கமலாலயக்ஷேத்ர மாஹாத்ம்யம்)  சொல்லிருக்கு.. அதுதான் நிஜம்..

வன்மீகநாதர் வரும்போதே வன்மீகநாதராத்தான் வந்தார்..  த்யாகராஜாவும் ஆரம்பத்லேர்ந்தே த்யாகராஜாவாத்தான் இருக்கார்..

இதைத்தான் அப்பர் ஸ்வாமிகளும் ஒருவனாய் என்று  ஆரம்பித்து ரொம்ப அழகாக தன்னுடைய திருவாரூர் திருத்தாண்டகத்தில் ஸ்வாமி தன்னுடைய இத்தனை லீலைகளுக்கும் முன்னோ, பின்னோ எந்தக் காலத்தில் திருவாரூரைத் தன் கோயிலாகக்  கொண்டார்ங்கறது தெரீயலயேன்னு பாடியிருக்கார்..” என்று முடித்தார்கள்.. (1)
                                                                                                                             ...   தொடரும்
                                                                                                               
(1)   பொதுவாகச் சிவன் கோவில்களில் தேவாரம் பாடி நிறைவு செய்யும்போது 

திருச்சிற்றம்பலம்” என்று கூறி நிறைவு செய்வது மரபு. ஆனால் திருவாரூர்த் 

திருக்கோயிலில் இந்த வழக்கம் இல்லை. 


தில்லைக்கும் மூத்தபதி  திருவாரூராதலின் திருவாரூர்ப் பூங்கோயிலில் 

திருச்சிற்றம்பலம் என்று சொல்லி நிறைவு செய்வதில்லை.