Sunday, August 23, 2015

வணங்காமுடிராஜா - III - அரிய புகைப்படங்கள்



உடையார்பாளையம்  ஸம்ஸ்தானத்தில் 

ஸ்ரீபெரீவாளின் பட்டண ப்ரவேசம்







      உடையார்பாளையத்தில்       

ஸ்ரீபெரீவா திருக்கொலுக்காட்சி






 உடையார்பாளையம் ராஜகுடும்பத்தினர்













Friday, August 21, 2015

வணங்காமுடிராஜா - II



அதுவரை ஏதும் பேசாமல் இருந்த ஸ்ரீபெரீவா, அம்முதியவருடன் வந்த சிறுவனைப் பார்த்து “வணங்காமுடி ராஜான்னா யாருன்னு உனக்குத் தெரியுமோ?” என்று கேட்டார்கள்..

உடனே அச்சிறுவன் தன்னுடைய தாத்தாவை நோக்கிக் கை காட்டினான்…

முகலாயர்கள், ப்ரெஞ்சுக்காரர்கள், இங்க்லீஷ்காரர்கள் என்று எத்தனையோ பெரும் சைன்யங்கள் பல சந்தர்ப்பங்களில் உடையார்பாளையத்தைக் கைப்பற்றத் துடித்து பெரும் முற்றுகைகள் நிகழ்ந்துள்ளன.

ஆனால் எக்காலத்திலும் யாருக்கும் தலைவணங்காமல் மிகுந்த துணிவுடன் போரிட்டும், பல யுக்திகள் மூலமாகவும் அம் முற்றுகைப்போர்கள் யாவற்றிலும் உடையார்பாளையத்தாரே வென்றுள்ளனர்.. அதனால் அவர்களுக்கு “வணங்காமுடிராஜா” என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது..

தன்னை “வணங்காமுடிராஜா” என்று தன் பேரன் வாயிலாக எசமான் (ஸ்ரீபெரீவா) குறிப்பிட்டதும்.. பெரியகுழந்தை ராஜா மனஸுக்குள் தன் வங்கிசத்தின் வணங்காமுடிப் பெருமை மறுபடியும் தோன்றியது..

நம்ப பரம்பரைக்கு இருக்குற வணங்காமுடிராஜாங்கற பட்டம் எப்பேர்ப்பட்டது.. எத்தனை கஷ்டம் வந்தாலும் யாரிடமும் நம்ப தல குனியக்கூடாது.. மனஸ் தெம்புடன் எல்லாத்தையும் சமாளிச்சுதான் கடக்கணும்.. அதான்.. ஸாமி.. எசமான் ஒரு வார்த்தையில சொல்லிப்புட்டாங்களே.. போயும்.. போயும் கேவலம் சம்சாரச் சுழலைப் பற்றி இவ்வளவு நேரம் எசமான்கிட்டே பேசிட்டோமே. அவாளை ச்ரமப்படுத்திட்டோமே.” என்று வருத்தப்பட்டுக் கொண்டார் பெரியகுழந்தை ராஜா..

ஜன்மத்துக்கும் எசமான் அருள் மட்டும் போதுங்க... எசமான் சன்னிதானத்தில் என்னிக்கும் பக்தியோடே இருக்கணுங்க” என்று ஸ்ரீபெரீவாளிடம் மனம் குவித்துப் ப்ரார்த்தித்தார்..

பாரம்பர்யமாக அவருக்கு ஸ்ரீமடத்திலிருந்து செய்யப்படும் மரியாதைகளைப் ஸ்ரீபெரீவா ஆக்ஞைப்படி ஸ்ரீபாலபெரீவா முன்னிலையில் பெற்றுக்கொண்டார்..  

ஸ்ரீபெரீவா மற்றும் ஸ்ரீபாலபெரீவா இருவரையும் நமஸ்கரித்து விடைபெற்றார் ராஜா..

அன்று இரவு.. ஸ்ரீபாலபெரீவா அவர்களின் ஸன்னதியில் நின்றிருந்தேன்..

நண்பகலில் நடந்த இந்நிகழ்வு பற்றி ஸ்ரீபாலபெரீவா என்னிடம் மீண்டும் நினைவு கூர்ந்தார்கள்..

ஸ்ரீபாலபெரீவாளுக்கு சரித்திரத்தில் பெரும் பயிற்சி உண்டு.. சிலாசாசனங்கள், செப்பேடுகள், பழந்தமிழ் மற்றும் க்ரந்தச் சுவடிகளை அனாயாசமாக வாசித்துக் காட்டுவார்கள்.. பண்டைய வரலாற்றுப் பதிவுகள் யாவற்றையும் தம் விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.. ஸ்ரீபெரீவாளும் அவ்வப்பொழுது ஸ்ரீபாலபெரீவாளிடம் அரிய பல சரித்திர விஷயங்களைப் பற்றிச் சொல்லி மென்மேலும் ஊக்குவிப்பார்கள்..

நல்லதொரு சந்தர்ப்பம் வாய்த்ததென்று எண்ணி உடையார்பாளையம் பற்றி ஸ்ரீபாலபெரீவாள் சொல்லியவற்றை நன்றாக மனத்தில் வாங்கிகொண்டேன்..

வன்னிய குல க்ஷத்ரியர்களான உடையார்பாளையம்  ராஜ வம்சத்தினர் காஞ்சிபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.. பல நூற்றாண்டு காலமாக ஸ்ரீமடத்தின் அடியவர்கள்..

பல்லவ, சோழ மன்னர்களின் காலத்திலிருந்தே தொடர்ந்து நாடாண்டவர்கள்.. விஜயநகர  மன்னர் வீரநரசிம்மராயர் காலத்தில் தஞ்சை ராமபத்ரநாயக்கர் தலைமையின்கீழ் பாமினி (பீடார்) ஸுல்தானுடன் பெரும் போரிட்டு, இறுதியில் பரீத்ஷா என்னும் அந்த பாமினி ஸுல்தானை ஏழு துண்டுகளாக வெட்டி “பரீத் ஸப்தாங்க ஹரண”  என்னும் சிறப்பு விருதைப் பெற்ற பெரும் வீரர்..

17ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தைப் போர் மேகங்கள் சூழ்ந்தபோது, காஞ்சியிலிருந்து செஞ்சிக் கோட்டைக்குப் பாதுகாப்பிற்காக எடுத்துச் செல்லப்பட்ட ஸ்ரீஸ்வர்ண(பங்காரு)காமாக்ஷி அம்பாள், ஸ்ரீவரதராஜ ஸ்வாமி விக்ரஹங்களை, பிற்பாடு உடையார் பாளையத்திற்குக் கொண்டுவந்து பாதுகாத்தவர்கள்..

சிதம்பரம், கங்கைகொண்டசோழபுரம் முதலிய தலங்களைப் புரந்தவர்கள்.. தருமபுரம், திருவாவடுதுறை முதலிய பல சைவ ஆதீனங்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.. பல வித்வான்களை தம் ஸம்ஸ்தானத்தில் வைத்து அன்புடன் ஆதரித்தவர்கள்..

உ.வே.ஸ்வாமிநாத ஐயர் இந்த ஸம்ஸ்தானத்தைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்..

ஸ்ரீமடத்திற்கு உடையார்பாளையம்  ராஜ வம்சத்தினர் செய்திருக்கும் அரும் பணிகள் ஏராளம்

ஸ்ரீஆசார்யஸ்வாமிகளின் யாத்ரை ஸவாரியில்,

ஸ்ரீசந்த்ரமௌளீச்வர ஸ்வாமியின் பூஜா மண்டபம், ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளின் சப்த கலச அம்பாரி, ஸிம்ஹாஸனம்  மற்றும் பல்லக்கைத் தூக்கிவரும் போகிகள்

தலைப்பாகையணிந்து ராணுவ உடுப்புடன் கருப்பு மற்றும் வெள்ளைக் குதிரைகளின் மீதேறி ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகளின் ஸவாரியில் முன்னால் வரும் ஸிப்பாய்கள்

டங்கா வாத்யம் வைத்துக் கட்டிய குதிரை மேல் வருபவன்,

ஒட்டகச்சிவிங்கிகள், ஒட்டகங்களின் மீதேறி வரும் முஸல்மான்கள், (ஸ்ரீபெரீவா காலத்தில் பாஜி என்று ஒரு ஒட்டகக்காரன் இருந்தான்

கைதீவட்டிக் காரர்கள்

ஸ்ரீஆசார்யஸ்வாமிகளின் மரச் சாமான்களைத் தம் தலையில் சுமந்தபடி உடன் ஓடி வரும் காலாட்கள்

ஸ்ரீமடத்தில் இருந்து வரும் ப்ராசீன வாத்யமான கௌரிகாளை ஊதுகிறவர்கள், 

மற்றொரு பழைய வாத்யமான திமிரி நாகஸ்வரம் வாசிக்கிறவர்கள், 

நகரா, டவண்டை, ஸுத்த மத்தளம் மற்றும் தவில் வாத்யங்களை வாசிக்கிறவர்கள், 

உள்பாரா மற்றும் வெளிப்பாராக்காரர்கள், 

யானைப்பாகர்கள், 

மாட்டுவண்டி ஓட்டுபவர்கள், இதர பணி செய்பவர்கள்...

...என்று ஸுமார் இருநூறு, முன்னூறு பேர் ஆட்கள் ஸ்ரீமடம் முகாமில் எப்போதும் நிறைந்து இருப்பர்..

ஸ்ரீஆசார்யஸ்வாமிகளின் பல்லக்கைச் சுமந்து செல்ல பதினாறு போகி ஆட்களையும், அவர்களுக்குத் தலைவனாக பெத்தபோகியாக ஒரு அனுபவஸ்தனையும் சேர்த்து மொத்தம் பதினேழு போகியாட்களை உடையார்பாளையத்திலிருந்து ஸ்ரீமடத்திற்கு அனுப்பி வைப்பது நீண்ட கால வழக்கம்.

ஒவ்வொரு வருஷமும் வ்யாஸபூஜை ஆகி பின்னர் இரண்டு மாஸங்கள் ஸ்ரீஆசார்யஸ்வாமிகள் சாதுர்மாஸ்ய வ்ரதம் அநுஷ்டித்து ஓரிடத்தில் தங்கி இருப்பார்கள்.

ஸ்ரீஆசார்யஸ்வாமிகள் சாதுர்மாஸ்ய வ்ரதம் துவங்கியவுடன் முன் வருஷத்து சாதுர்மாஸ்யத் துவக்கத்திலிருந்து போகிகளாக இருப்பவர்களின் குழுவினர் விடைபெற்றுச் சென்று விடுவர். பிறகு, பதினேழு பேர் கொண்ட புதிய வருஷத்துக் குழுவினர் சாதுர்மாஸ்யம் நிறைவுறுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஸ்ரீமடம் முகாமிற்கு வந்துவிடுவார்கள்.

இப்படி ஸ்ரீமடம் கைங்கர்யத்தில் பல தலைமுறைகளாக இருக்கும் குடும்பத்தினருக்கு உடையார்பாளையம் ராஜ்யத்தில் மான்யமும் தரப்பட்டிருந்தது. ஸ்ரீமடத்தில் போகியாட்கள் வேலை பார்க்கும் ஸமயங்களில் ஒவ்வொரு நாளும் இவர்களுக்கு படிகாசும், படியரிசியும் தரப்படும்.  

ஸ்ரீபெரீவாளும் பலமுறை உடையார்பாளையத்திற்கு விஜயம் செய்திருக்கிறார்கள்.. ஸ்ரீபெரீவா உத்தரவுப்படி ஸ்ரீபுதுப்பெரீவா பொன்விழா சமயத்தில் மாயவரம் வக்கீல் ஸி.ஆர்.கே. தலைமையில் ஸ்ரீமடத்தின் மூலம் உடையார்பாளையம் சிவாலயத்தைத் திருப்பணி செய்து தந்தது..“ என்று ஸ்ரீபாலபெரீவா அனேக விஷயங்களை அடுக்கடுக்காகச் சொன்னார்கள்..

ஜாஜ்வல்யமாக அக்காலத்தில் ப்ரகாசித்துக்கொண்டிருந்த உடையார் பாளையம் ஸம்ஸ்தானம் என் மனக்கண்களில் தெரிந்தது..

பண்டைய சுதேச ஸம்ஸ்தானங்கள் எல்லாவற்றுக்கும் இருந்த அதே தலைவிதிதான் உடையார்பாளையத்திற்கும் இருந்தது..

கணக்கில்லாத சந்ததிகளும், தட்டுமுட்டுஸாமான்களும், பராமரிக்க முடியாத அரண்மனையும், கோர்ட்டு வ்யாஜ்யங்களும்தான் நவீன காலத்தில் எஞ்சி இருந்தன..

… இந்நிகழ்ச்சிக்குப்பின் சில வருடங்கள் கடந்தன..

ஜனவரி 8ம் தேதி 1994ம் வருஷம்..  ஸ்ரீபெரிவா காஞ்சீபுரத்தில் ஸித்தியடைந்துவிட்ட சேதியறிந்து பதைத்துப்போய் காஞ்சீபுரத்திற்கு விரைந்தேன்..

செங்கல்பட்டை அடைந்தபோது அதிகாலை 3 மணி இருக்கும்.. அங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்து காஞ்சீபுரம் போய்விடலாம் என்று எண்ணம்..

நல்ல பனி.. குளிர்..

அந்த நேரத்தில் ஒரு டாக்ஸி தற்செயலாக அங்கு நின்றிருந்தது.. டாக்ஸி டிரைவரும் வருவதாகச் சொல்லி வண்டியைக் கிளப்ப எத்தனித்தார்.. வண்டியின் பக்கக் கண்ணாடி வழியே பார்த்தபோது..

ஒரு முதியவர் குளிரைத் தாங்க முடியாமல் போர்த்திக்கொண்டு தன்னந்தனியே ரோட்டின் ஓரத்தில் வண்டிக்காக நிற்பது தெரிந்தது..

கூர்ந்து நோக்கினேன்..

அட.. வணங்காமுடி ராஜான்னா இவர்…!”

அவர் எதற்காக அங்கு வந்திருக்கிறார் என்று யூகிக்க முடிந்தது… வண்டியிலிருந்து இறங்கி அவர் அருகில் சென்றேன்…

நாங்களும் ஸ்ரீமடத்திற்கு விரைந்து கொண்டிருப்பதைச் சொல்லி அவரையும் வண்டியில் அமர்த்திகொண்டு புறப்பட்டோம்..

அன்று ஸ்ரீபெரிவா தம்மை வணங்காமுடி ராஜா என்று சொல்லி நடப்பு வாழ்க்கைத் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் பக்வத்தைத் தனக்கு குறிப்பால் உபதேசித்ததை ராஜா சொல்லிக்கொண்டே வந்தார்..

ஸ்ரீமடம் வந்து சேர்ந்தோம்..

உள்ளே வந்து பார்த்தபோது, மேடையில் ஸ்ரீபெரீவாளின் ஊனுடம்பு ஆலயமாகக் காட்சியளித்தது….

வணங்காமுடிராஜான்னா யாருன்னு தெரியுமோ? என்று ஸ்ரீபெரிவா அன்று செய்த உபதேசக் காட்சி மீண்டும் என் நெஞ்சில் நிறைந்தது..









வணங்காமுடிராஜா - I


இந்தப் பெயரை ஸ்ரீபெரீவாளின் திருவாக்கால் கேட்ட அத்தருணத்திற்கு முன்வரையிலும் நான் கேள்வியுற்றதில்லை…

ஒருநாள் நண்பகல்..

ஸ்ரீபெரீவாளின் திருமுன்பு நரைத்த பெரும் மீசையுடன், ன் வற்றலான தேகத்தை மறைக்கும் கசங்கிய சரிகைச் சட்டையுடன் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார்..

அவர் அருகில் ஒர் சிறுவன்.. அவனுக்கு சுமார் பன்னிரண்டு பிராயம் இருக்கலாம்..

அம்முதியவர் கையில் ஒரு மரப் பெட்டி இருந்தது.. பெட்டியில் மங்கலான எழுத்தில் இனிஷியல் காணப்பட்டது..

ஸ்ரீபெரீவா அந்த முதியவருக்கு மிகச் சமீபத்தில் வந்து அமர்ந்து கொண்டார்கள்.. அம்முதியவர் நீண்ட நேரம் பேசிக்கொண்டேயிருந்தார்.. 

ஸ்ரீபெரீவா, அவரின் மனக்குறைகளை நிதானமாகக் கேட்டுக் கொண்டார்கள்..

தன்னுடைய வாழ்க்கைத் துன்பங்களை ஸ்ரீபெரீவா ஸன்னதியில் கொட்டித் தீர்த்துவிடவேணுமென்ற தீர்மானத்துடன் அவர் வந்திருப்பது போலிருந்தது..

ஒருவழியாக அம்முதியவர் பேசி முடித்தார்..

சிறிது அமைதி..

அதுவரை ஏதும் பேசாமல் இருந்த ஸ்ரீபெரீவா, அம்முதியவருடன் வந்த சிறுவனைப் பார்த்து “வணங்காமுடிராஜான்னா யாருன்னு உனக்குத் தெரியுமோ?” என்று கேட்டார்கள்..

உடனே அச்சிறுவன் தன்னுடைய தாத்தாவை நோக்கிக் கை காட்டினான்…

அம்முதியவர்தான் உடையார்பாளையம் ராஜா..

“கச்சியுவரங்க காளக்க தோழப்ப பெரியகுழந்தை மஹாராஜா” என்பது அவர் பெயர்..

குடைமேலிருந்து குஞ்சரம் ஊர்ந்த உடையார்பாளையம் பாளையக்காரர்கள் காலச் சக்கரத்தின் சுழற்சியில் சிக்கி நலிவுற்றனர்.. சொத்துக்கள் பராதீனத்துக்காளாயின… இத்தனை துன்பத்திலும் மிடுக்குக் குறையாமல் இருந்த மன்னர் பெரியகுழந்தை ராஜாவும் ஒரு நாள் தளர்ந்து போனார்… 

தன் மனக்குறைகள் யாவற்றையும் காஞ்சிபுரத்திலிருந்த பெரிய எசமானிடம் கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்ற வேகத்துடன் அன்று வந்திருந்தார்.

இப்போது மறுபடியும் கதைக்குப் போவோம்....              1/2

Wednesday, August 12, 2015

1387 ரூபாய் அனுப்பு !


அன்று காஞ்சீபுரம் ஸ்ரீமடத்தில் ஸ்ரீமஹா பெரியவாள் தரிசனம் தந்து கொண்டிருந்தார்கள். உடன் அணுக்கத்தொண்டர் சிலர் மட்டும் இருக்க பயத்துடன் தயங்கியபடியே சற்று ஓரமாகச் சென்று நமஸ்கரித்தேன்.
திரும்பிப்பார்த்த ஸ்ரீபெரியவாள் ” பூனா க்ருஷ்ணமூர்த்திக்கு பேப்பர் சிலவு, ஸ்டாம்ப், தபால்சிலவு நிறைய ஆறதாம். அதுக்காக ஒரு வருஷத்துக்கு மாசாமாசம் 1387ரூபாய் இவனை அனுப்பச் சொல்லு ” என்று கணீர்க் குரலில் உத்தரவிட்டார்கள்.
உடம்பும் மனசும் பதறிக்கொண்டிருந்ததால் உத்தரவானது சட்டென்று பிடிபடவில்லை.
“பூனா கிருஷ்ணமூர்த்தி… பூனா கிருஷ்ணமூர்த்தி…” என்று இரண்டு முறை அழுத்திச்சொன்னவர்களிடமிருந்து மறுபடியும் “1387 ரூபாய் அனுப்பு!” என்று ஆக்ஞை வந்தது.
“அப்படியே செய்கிறேன் ” என்று சொல்வதற்குக்கூடத் தைரியம் இல்லை. நாக்குக் குழறிக்கொண்டு தலையைத் தாழ்த்தி பலமுறை நமஸ்கரித்தேன். கையைத் தூக்கி ஆசீர்வாதம் செய்தார்கள்…
…பக்கத்தில் ஏதோ சப்தம்… கண்ணைத்திறக்கிறேன்..
“இத்தனையும் ஸ்வப்னத்திலேன்னா நடந்திருக்கு! …” வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து மணியைப் பார்த்தபோது விடியற்காலம் நாலரை ஆகியிருந்தது.
அன்றைக்குத் தேதி 15/10/2012. விடிந்தால் திங்கட்கிழமை…
“யாரை வேண்டுமானாலும் ஸ்வப்னத்தில் பார்க்கலாம். ஆனால் எங்க அண்ணாவைப் பார்க்கணும்னா அவாளே நெனைச்சு தரிசனம் தந்தால்தான் உண்டு. அதனால் பெரீவா ஸ்வப்னத்தில் வந்தால் நேரா வந்தா மாதிரின்னு எடுத்துண்டு அவா சொன்னதை செய்யணும் ” என்று ஸ்ரீசிவன் சார் சொல்லிக் கொடுத்தது நினைவுக்கு வருகிறது.
சட்டென்று விபூதியை அள்ளிப் பூசிக்கொண்டு மேற்கொண்டு செய்வதறியாது அமர்ந்திருந்தேன். மணி ஆறு அடித்தது…
“இத்தனை பெரிய ஜன ஸமூஹத்தில் பூனா க்ருஷ்ணமூர்த்தி என்பவரை எப்படித் தேடிக்கண்டு பிடிப்பது? பெரீவா உத்தரவாச்சே.. கட்டாயம் செய்துடணுமே “ என்று மனது சஞ்சலித்தது.
உள்ளுக்குள் ஒரு யோசனை. “சிவராமனிடம் கேட்கலாமே” …
விஷயத்தைக் கேட்டுகொண்டசிவராமன் ”இதோ அஞ்சு நிமிஷத்தில் சொல்றேன்” என்றார். அவரே மறுபடியும் லைனுக்கு வந்தார்.
“ஆரூரான்!பெரீவா வாக்கு ஸத்யம்! நீ கேட்ட மாதிரி பூனா க்ருஷ்ணமூர்த்தி சாஸ்த்ரிகள்னு ஒர்த்தர் காஞ்சீபுரத்திலேயே இருக்கார். அவரும் அவாத்து மாமியும் லிங்கப்பையர் தெருவில் வேதபவனம் என்கிற மடத்து கட்டிடத்தில் இருக்கா. அவருக்கு வயசு தொண்ணூறு இருக்கும்.
பெரீவாளின் சதாரா யாத்ரையின்போதெல்லாம் நிறைய கைங்கர்யம் பண்ணியிருக்கார். பெரீவா உத்தரவுப்படி ரொம்ப நாளா வேதபாராயணம் மடத்தில் நடத்திண்டு இருக்காராம்.
அதுக்காக எல்லோருக்கும் நிறைய தபால் போட்டுக்கொண்டே இருப்பாராம்…
அவரின் அட்ரஸ் எழுதிக்கோ… போன் நம்பரும் தரேன்.. நோட் பண்ணிக்கோ.. அவரிடமும் பேசிட்டேன்.. மறக்காமல் இன்னிக்கே பணத்தை மணி ஆர்டர் பண்ணிடு ” என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தார்.
பத்து நிமிஷத்துக்குள் எல்லாம் கிடைத்துவிட்டது.
“சீக்ரம் குளிச்சுட்டு, பெரீவா பாதுகை கிட்ட பணத்தை வைத்து நமஸ்காரம் பண்ணிட்டு அடுத்த வேலையைப் பாருங்கோ” என்றாள் என் அகத்துக்காரி.
ஸ்ரீமஹாபெரியவாள் படத்தைப் பார்த்தேன்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி… பெரீவா உத்தரவாயிடுத்தே… இத்தனை பெரிய ஜன ஸமூஹத்துக்குள் பூனா கிருஷ்ணமூர்த்தியை எப்டித் தேடப்போறோம்னு ரொம்பவும் பயந்துட்டியோ?” என்று கருணையுடன் கேட்பதுபோலிருந்தது.
தெரிஞ்சதைச் சொல்லி ரெண்டு பத்ரபுஷ்பத்தைச் சார்த்தி விட்டு பணத்தை எடுத்துக்கொண்டு தபால் ஆபீசுக்குப் .போய் பூனா க்ருஷ்ணமூர்த்தி சாஸ்த்ரிகளுக்கு 1387 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பினேன்.
“அப்பாடா… பெரீவா உத்தரவிட்டபடி செஞ்சாச்சு” … என்றாலும் “அது என்ன 1387 ரூபாய் கணக்கு? ” மனசு கேள்வியைப் போட்டது!…
“அது என்ன 1387 ரூபாய்?..” மனசின் கேள்விக்கு புத்தியால் பதில் சொல்லக் கூடவில்லை.
“கொஞ்ச நேரம் ஆராய்ச்சி பண்ணாமல் இருக்கியா.. நானே ஒண்ணும் புரியாமல் முழிச்சிண்டு இருக்கேன்” புத்தி தனியாகக் கழற்றிக்கொண்டது.
“சரி.. எல்லாம் பெரீவா விட்ட வழி!” என்று ஒரு மாதிரியாக மனசு மடங்கிக்கொண்டது.
கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது…
1990ம் வருஷம். ஸ்ரீமஹாபெரியவாள் ஸ்ரீமடத்தில் இருந்த சமயம். ஸ்ரீசந்த்ரமௌளீ ச்வரர் சன்னதிக்கெதிரில் ஸ்ரீகார்யம் நீலகண்ட ஐயர் தன் அன்றைய அலுவல்களில் மும்முரமாயிருந்தார். அருகில் அமர்ந்தபடி அவருக்கு ஒத்தாசை செய்து கொண்டிருந்தேன். ஸ்வாமி சந்நதிப் பக்கமிருந்து ஸ்ரீசந்த்ரமௌளி மாமா (ஸாமவேதி ) வேகமாக வந்தார்.
” ஏய்.. உன்னை பெரீவா உத்தரவாறது” என்றார்.
என்னால் இதை நம்ப முடியவில்லை.
“மாமா, பெரியவாளுக்கு என்னைத் தெரியாதே.. எங்க தாத்தா அப்பாவையெல்லாம்தானே தெரியும்.. சரியாகக் கேட்டுண்டுட்டேளா ?.. ஒரு சமயம் அவாளுக்கு ஏதானும் உத்தரவு பண்ணியிருக்கப் போறா?” என்று குறுக்குக் கேள்வியைப் போட்டேன்.
” ஏம்ப்பா.. எத்தனை வருஷமா பெரீவாட்ட இருக்கேன். அவா சொல்றத கரெக்டா நான் புரிஞ்சுக்க மாட்டேனா?.. உன்னைச் சொல்லிதாம்ப்பா உத்தரவாச்சு!” என்று அழுத்திச் சொன்னவர் கையோடு என்னைக் கொண்டுபோய் ஸ்ரீமஹாபெரியவாளின் சன்னதியில் ஆஜர்படுத்தினார்.
இதிலிருந்துதான் ஸ்வாரஸ்யமான கதை ஆரம்பம்…
அணுக்கத்தொண்டர் : ” திருவாலூர் ஆடிட்டர் வெங்கட்ராமையர் பேரன் இதோ நிக்கறான் “
ஸ்ரீமஹாபெரியவாள்: ” இவனா..? எனக்காக பத்தாயிரம் ரூபாய் இவன் தர்மம் பண்ணுவானான்னு கேளு !”
அணுக்கத்தொண்டர் : ” ஏம்ப்பா, நீ பெரீவாளுக்காக பத்தாயிரம் ரூபாய் தர்மம் பண்ணுவியா?”
ஆரூரன் : ” எங்கிட்டப் பணம் இல்லை. எங்க அப்பாக்கிட்ட கேட்டு வாங்கித்தரேன். “
அணுக்கத்தொண்டர் : ” இவன் படிச்சிண்டிருக்கான். அதனால தன் அப்பாட்டக் கேட்டு வாங்கித்தரேங்கறான்.”
ஸ்ரீமஹாபெரியவாள் : ” என்ன படிக்கறான் கேளு! “
அணுக்கத்தொண்டர் : (அவராகவே) “சி. ஏ படிக்கறான்”.
ஸ்ரீமஹாபெரியவாள் : ” இவன் ஏன் சி.ஏ படிக்கறான் கேளு! ” (அணுக்கத் தொண்டருக்கு இந்தக் கேள்வி புரியவில்லை )
ஸ்ரீமஹாபெரியவாள்: ” அந்தக்காலத்ல இவன் தாத்தா பெரீய்ய ஆடிட்டர்… அவர் சி.ஏ படிக்கலே… ப்ராக்டீஷனர்தான். இவன் அப்பாவும் ஆடிட்டர்தான். ஆனா tax advocate. அவா ரெண்டு பேருமே சி. ஏ படிக்காமலேயே ஆடிட்டராக முடிஞ்சுதுன்னா இவன் மட்டும் சி.ஏ படிச்சு என்ன பண்ணப் போறானாம்..?” (சிறிது நேரம் மௌனம்.. பிறகு தொடர்கிறார்கள். ) “சரி.. எப்போ படிச்சு முடிப்பான்னு கேளு !”
அணுக்கத்தொண்டர் : ” எப்போப்பா படிச்சு முடிப்பே?”
(அந்த சமயத்தில் C A Intermediate ஒரு பாதி முடிந்து அடுத்ததை முடிக்க முடியாமல் நான் தடுமாறிக் கொண்டிருந்தேன்.)
ஸ்ரீமஹாபெரியவாள் இப்படி கேள்வி கேட்டதும் அழுகை மேலிட்டது.
ஆரூரன் : “எப்போ முடிப்பேன்னு தெரீலை பெரீவா .. ரொம்ப கஷ்டமாயிருக்கு .. பெரீவா அனுக்ரஹம் பண்ணினா படிச்சு பாஸ் பண்ணிடுவேன்.”
ஸ்ரீமஹாபெரியவாள் : ” அப்டின்னா, இன்னும் நாலு வருஷத்ல பாஸ் பண்ணிடுவானா கேளு !”
ஆரூரன் : (அழுதுகொண்டு நமஸ்கரித்தபடியே) ” பெரீவா அனுக்ரஹத்ல பாஸ் பண்ணிடறேன் பெரீவா…”
ஸ்ரீமஹாபெரியவாள் : “அப்போ சரி… நாலு வருஷத்ல சி.ஏ படிச்சு பாஸ் பண்ணிட்டு அப்றமா எனக்கு பத்தாயிரம் ரூபாய் கொண்டுவந்து கொடு!”
இதற்குப் பிறகு நான் ஸத்குரு ஸ்ரீசிவன்சார் அவர்களிடம் அடைக்கலமானேன். ஒரு தாயார் தன் குழந்தையைப் பார்த்து கொள்வது போல ஸ்ரீசிவன்சார் என்னைப் பார்த்துக்கொண்டார். என்னைத் துரிசடக்கிப் படிக்க வைத்தார்.
சரியாக நான்கு வருஷம் கழித்து 1994 மே மாதம் சி.ஏ முடித்தேன்…. ஆனால், ஸ்ரீமஹாபெரியவாள் உத்தரவிட்டபடி பத்தாயிரம் ரூபாயை அவர்களிடம் என்னால் தர முடியவில்லை.
ஆமாம்.. ஸ்ரீமஹாபெரியவாள் 1994 January மாசம் சித்தியடைந்து விட்டார்கள்……
கடந்த காலச் சம்பவங்களை மனத்தால் அளைந்தபடியே அருகிலிருந்த ஸ்ரீமஹாபெரியவாள் படத்தைப் பார்த்தேன்...
“பெரீவாளுக்குச் சேரவேண்டிய பத்தாயிரம் ரூபாய்க்கு இருபத்திரெண்டு சொச்சம் வருஷத்துக்கு 3% simple interest ரூபாய் 6650/- . அதனுடன் ரூபாய் 10,000/- அசலையும் கூட்டினால் மொத்தம் ரூபாய் 16650/- அதை பன்னிரெண்டு மாசத்துக்கும் பிரிச்சால் 1387 ரூபாய் வரும் பார்..” என்று உள்மனசு சொன்னது !

“ தொழுது தூமலர் தூவித்துதித்து நின்று
அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்
பொழுதுபோக்கிப் புறக்கணிப்பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே”
– அப்பர் ஸ்வாமிகள்

மந்திரமாவது நீறு


“தாத்தா நீ யாரிடம் மந்திரிக்கக் கத்துண்டே?” என்று என் தாத்தாவிடம் ஒரு நாள் கேள்வியைப் போட்டேன்…
தாத்தாவுக்கு நல்ல மந்த்ர ஸித்தி உண்டு..
தேள்கடி, பாம்புகடி, இன்னதென்று தெரியாத விஷக்கடி, சுளுக்கு, மஞ்சட்காமாலை, ஜ்வரம், பயந்த கோளாறு என்று யாராவது நாலு பேர் தினமும் காலையிலிருந்தே அவரைப் பார்க்கக் காத்துக் கொண்டிருப்பார்கள்..
அப்படி வருபவர்களுக்கு உடனடியாகப் பலன் கிடைக்கும்…
தாத்தா யாரிடமும் மந்திரிப்பதற்குக் காசு பணம் வாங்க மாட்டார்.. மஞ்சட்காமாலைக்கு மந்திரித்துக் கொள்பவர்கள் மட்டும் திருவாரூர் காகிதக்காரத் தெரு மகமாயி கோவில் திருப்பணிக்காக இருக்கும் உண்டியலில் ஒரு ரூபாய் காசு போட்டுவிட்டுப் போகச் சொல்லுவார்..
கடுமையான வைதீக அனுஷ்டானம்.. ஆசாரம்.. பூஜைகள்... ஜபம்.. என்றெல்லாம் அதிகம் வைத்துக் கொள்ளாதவர்.. மிகவும் எளிமையாக இருப்பார்… எண்பது வருஷங்களுக்கு முன்பே தஞ்சாவூர் ஜில்லாவில் முதல் ஆடிட்டராகத் தொழில் செய்ய ஆரம்பித்தவர்..
தாத்தாவுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும்.. சிறு வயதில் என்னை தனியாக உட்கார வைத்து க்ரந்தாக்ஷரம் மற்றும் அனேக மந்த்ரங்களைக் கற்று கொடுப்பார்..
எப்போது பேசினாலும் ஸ்ரீபெரீவாளின் மஹிமை பற்றியும் ஸ்ரீமடத்து ஸம்ப்ரதாயங்கள் பற்றியும் சொல்லாமல் இருக்க மாட்டார்..
தாத்தா ஸ்ரீபெரீவாளின் மீளா அடிமை.. ஸ்ரீமடத்தின் உப முத்ராதிகாரி.. சாதாரண குடும்பத்தில் பிறந்து மிகவும் ச்ரமப்பட்டு முன்னுக்கு வந்தவர்..
மிகச் சாதாரணமாகத் தோற்றமளிக்கும் இந்த மனுஷர் எப்படி மந்திரிக்கவெல்லாம் செய்கிறார் என்று எனக்கு ரொம்ப நாளாக சந்தேகம்..
ஒருநாள், மெதுவாக அவரிடம் “தாத்தா நீ யாரிடம் மந்திரிக்கக் கத்துண்டே?” என்று கேள்வியைப் போட்டேன்…
தாத்தா சொல்ல ஆரம்பித்தார்..
“ 1941 ம் வருஷம்.. ஸ்ரீபெரீவா நாகப்பட்டணத்ல சாதுர்மாஸ்யம் பண்ணினா.. வ்யாஸபூஜை.. ஸ்ரீநீலாயதாக்ஷி அம்பாளின் ஆடிப்பூர மஹோத்ஸவம்னு அந்த ஊரே கோலாஹலமா இருந்தது..
அந்த சமயத்தில் ஸ்ரீபெரீவாளை தரிசனம் பண்ணப் போயிருந்தேன்..
பூஜை முடிஞ்சு தீர்த்தப் ப்ரஸாதம் கொடுத்த பிறகு, ஸ்ரீபெரீவாளை நமஸ்காரம் பண்ணி ஓரமா நின்னேன்..
என்னைப் பார்த்த ஸ்ரீபெரீவா ‘என்ன வேணும்’னு கேட்டா..
நான் தயக்கத்துடன் ‘ஸ்ரீபெரீவா எனக்கு ஏதாவது மந்த்ரோபதேசம் பண்ணணும்’னு கேட்டேன்..
உடனே ஸ்ரீபெரீவா என்னை தீர்க்கமாகப் பார்த்துவிட்டு..
‘டேய்.. வெங்கட்ராமா.. நீயே பெரிய மந்த்ரவாதிடா.! ’ என்று அழுத்தமாகச் சொல்லி விபூதி ப்ரஸாதம் கொடுத்தா....
ஸ்ரீபெரீவாளிடம் விபூதி ப்ரஸாதம் வாங்கிண்டு உடனே அங்கிருந்து கிளம்பி திருவாரூர் ஆத்துக்கு வந்துட்டேன்..
அதே சமயத்தில் சொந்த ஊரான நெம்மேலி க்ராமத்திலிருந்து வண்டி கட்டிக்கொண்டு என் சித்தப்பா ஸுப்பையரும் திருவாரூர் ஆத்துக்கு வந்து சேர்ந்தார்...
எங்க சித்தப்பா ஸுப்பையர் நன்னா மந்திரிப்பார்..
‘என்ன சித்தப்பா திடீர்னு இங்கே வந்திருக்கேள்’ னு அவரைக் கேட்டேன்..
‘எனக்குத் தெரிந்த மந்த்ரமெல்லாம் நம்ப ஆத்ல பல தலமுறையா யாராவது ஒருத்தர் வழியா வந்திண்டு இருக்கு..
எனக்கப்பறம் இதயெல்லாம் யாருக்காவது சொல்லி வைக்கணும்னு எனக்கு இத்தனை நாளும் தோணலே...
ஆனா இன்னிக்கு எனக்கு மனசில் உனக்கு இதயெல்லாம் உபதேசம் பண்ண்ணும்னு ஸ்ரீபெரிவா உத்தரவானதாகத் தோணித்து.. அதனால் உடனே வந்துட்டேன்..
..நாளெல்லாம் பார்க்க வேண்டாம்.. ஸ்ரீபெரிவா உத்தரவான நாளே ஸுதினம்’னு சொல்லி எனக்கு உடனே மந்த்ரோபதேசம் பண்ணி வெச்சார்..
அதுக்கப்பறம் நான் பெரீசா மந்த்ர ஜபம் உரு அதிகமாப் பண்ணலை.. எப்பவாவது கொஞ்சமாகப் பண்ணுவேன்..
..ஆனா எப்போதும் யார் கஷ்டத்துடன் வந்தாலும் ஸ்ரீபெரீவாளை மனஸில் நினச்சிண்டு தெரிஞ்சதைச் சொல்லுவேன்.. விபூதி கொடுப்பேன்..
அன்னிக்கு ஸ்ரீபெரீவா ‘வெங்கட்ராமா.. நீயே பெரிய மந்த்ரவாதிடா..’ன்னு சொல்லிக் கொடுத்த விபூதி ப்ரஸாதம்தான் இன்னிக்கும் அத்தனை பேர் கஷ்டத்தையும் தீர்க்கறதுப்பா..!” என்று சொல்லி முடித்தார் தாத்தா.
“ மந்திரமாவது ஸ்ரீபெரீவா திருநீறு “

ராமசுப்ரமண்யராஜா


1989.. சென்னையில் சி.ஏ இன்டர்மீடியட் பரீக்ஷைக்கு வாசித்துக் கொண்டிருந்த சமயம்.. பழைய மாணவன் என்பதால் லயோலா காலேஜ் ஹாஸ்டலில் தங்குவற்கு ரூம் கொடுத்திருந்தார்கள்.. 
என்னுடன் வேறு சில மாணவர்களும் அவ்விதம் தங்கிப்  படித்து  வந்தார்கள்..
அவர்களில் ஒருத்தன் ராமசுப்பு என்கிற ராமசுப்ரமணியன்..
அவனுக்கு சொந்த ஊர் ராஜபாளையம்.. அந்த ஊரில் ராஜு பிரிவினர் அதிகம்.. சுப்புவும் ராஜுதான்.. தெலுங்கு பேசுவான்.. ஆறடி உயரத்திற்கு மேல் இருப்பான்.. மாநில பாஸ்கெட்பால் ப்ளேயர்.. க்ஷத்ரிய வம்சம்.. ஸ்ரீபெரீவாளை நேரில் தரிசித்திராவிட்டாலும் நல்ல பக்தி கொண்டவன்..
ஒவ்வொரு வாரமும் காஞ்சீபுரம் சென்று ஸ்ரீபெரிவாளைத் தரிசனம் பண்ணிவிட்டு வருவது என் வழக்கம்.. ஒருநாள் சுப்பு தானும் வருகிறேன் என்று சேர்ந்துகொண்டான். இன்னும் சில நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு எல்லோருமாகச் சேர்ந்து காஞ்சீபுரம் சென்றோம்..
அப்போது ஸ்ரீபெரிவா ஸ்ரீமடத்தில் தரிசனம் அளித்துக்கொண்டிருந்தார்கள்.. சாயங்கால நேரம்.. இருட்ட ஆரம்பித்திருந்தது..
பக்தர்கள் ஒவ்வொருவராக வரிசையில் வந்து ஸ்ரீபெரிவாளைத் தரிசனம் செய்துகொண்டிருந்தார்கள்.. க்யூ வரிசைக்குப் பின்னால் இருந்த சிமெண்டு மேடையில் நாங்கள் நின்றுகொண்டிருந்தோம்.. அந்த இடம் சற்று உயரமாக இருக்கும்..
அப்போது ஸ்ரீபெரீவா என்னிடம் சுப்பு பக்கமாகத் தன் திருக்கரத்தைக் காண்பித்தார்கள்.. “அவன் யார் ?” என்பது போல ஜாடை காட்டினார்கள்..
அருகிலிருந்த அணுக்கத்தொண்டர் என்னிடம் “ உன் கூட வந்திருக்கும் அந்தப் பையன் பேர் என்ன? “ என்று கேட்டார்…
உடன் “ இவன் பேர் ராமசுப்ரமண்ய ராஜா.. சொந்த ஊர் ராஜபாளையம்.. மெட்ராஸில் எல்லாரும் சேர்ந்து படிச்சிண்டிருக்கோம்” என்று தெரிவித்துக் கொண்டேன்..
அடுத்த கேள்வி பாய்ந்து வந்தது..
தூரத்திலிருந்த ஸ்ரீபெரீவா ராமசுப்புவைக் கை காட்டி “அவன் பூணல் போட்டுண்டிருக்கானா..?.. ஏன் அவன் பூணல் போட்டுக்கலைன்னு கேளு “ என்றார்கள்..
ராமசுப்புவை நான் கவனித்துப் பார்த்தேன்.. ஒரு பெரிய வஸ்த்ரத்தால் தன் உடம்பை நன்றாக போர்த்திக் கொண்டிருந்தான்.. அவன் மேலிருந்த வஸ்த்ரம் தவிர ஒன்றும் அருகிலிருந்த என் கண்களுக்குத் தெரியவில்லை..
'அவனுக்கு பூணல் இல்லை ‘ என்று அவ்வளவு தூரத்திலிருந்து ஸ்ரீபெரிவா அவனைக் குறிப்பாகக் காட்டிக் கேட்டதும் எங்களுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை..

நான் மெதுவாக சுப்புவைப் பார்த்தேன்..
ராமசுப்பு சற்று பயத்துடன் ஸ்ரீபெரிவாளைக் கும்பிட்டு “ எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.. அதனால் பூணல் போடலே சாமி..” என்றான்..
ஸ்ரீபெரீவா அவனைப் புன்முறுவலுடன் காட்டி “ அவா ( ராஜு ) ஜாதியில் கல்யாணத்தின்போதுதான் பூணல் போடற வழக்கம்.. அதே மாதிரி கல்யாணம் ஆனவாளை மட்டும்தான் அவா பேருடன் ‘ராஜா’ ன்னு சேர்த்துச் சொல்றது ஸம்ப்ரதாயம்..
இந்தப் பையனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை..அதனால் இவன்பேரைச் சொல்லும்போது ராமசுப்ரமண்ய ராஜான்னு சொல்றது அவாளுடைய ஜாதி ஸம்ப்ரதாயப்படி சரியில்லே.. இவனை ராமசுப்ரமண்யன் என்றுதான் இப்போதைக்குக் கூப்பிடணும் “ என்று சொல்லி முடித்தார்கள்…

எசமானும் தியாகராசாவும்


1984ம் வருஷம் ஸ்ரீபெரீவா காஞ்சிபுரத்தில் இருந்த சமயம்..

திருவாரூரிலிருந்து   சுவாமியைத்  தொட்டு   பூஜிக்கும்   உரிமை  பெற்ற   நயினார்   வந்து கோவில்  மரியாதைகளைச் சமர்ப்பித்தார். 

ப்ரஸாதத்   தட்டில்   ஸ்ரீதியாகராஜாவுக்குச் சார்த்திக்  களைந்த செங்கழுநீர்,  நீலோத்பல புஷ்பங்கள்  இருந்தன.  

இவ்விரண்டும் மிகவும் அரிதானவை. திருவாரூர் தவிர வேறெங்கும் காணமுடியாதவை. 

ஸ்ரீதியாகராஜாவுக்கு தினமும் இந்த புஷ்பங்களைச் சார்த்துவது வழக்கம்.

கோவில் ஐந்து வேலி, கமலாலயக் குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்பது வழக்கு மொழி.

ப்ரஸாத தட்டைத் தன் கரத்தால் தொட்ட ஸ்ரீபெரீவா இரண்டு புஷ்பங்களையும் தன் சிரத்தில் சார்த்திக்கொண்டார்கள்...சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு…திருவாரூரிலிருந்து செங்கழுநீர், நீலோத்பலக் கிழங்குகளை ஸ்ரீமடத்தில் பயிராக்கக் கொண்டு வரும்படி உத்தரவிட்டார்கள்.
ஊருக்குத் திரும்பினோம்..
செங்கழுநீர்ஓடைக்குப் போனோம். காவல்காரரைப் பார்த்து விஷயத்தைச் சொன்னோம்..
“திருவாரூரில் மட்டுமே வளரும் இந்த புஷ்பங்கள் வேறெங்கும் வளர்வதில்லை ; இருந்தாலும் எசமான் சொன்னா நடக்கும்.. அவங்களும் தியாகராசாவும் வேற இல்லீங்களே!” என்றபடியே கிழங்குகளைப் பறித்துக் கொடுத்ததார் காவல்காரர் சுந்தரமூர்த்தி..
உத்தரவானபடியே கொடிக்கிழங்குகளைக் ஸ்ரீமடத்திற்குக் கொண்டு வந்து ஸ்ரீபெரீவாளிடம் சமர்ப்பித்தோம்..
ஸ்ரீபெரீவாளின் சன்னதிக்கெதிர்புறமாக இருந்த மேடையின் வெளிப்புறம் நடைபாதையை ஒட்டி இரண்டு தொட்டிகளை கட்டச் சொன்னார்கள். ஆற்று மண், குளத்துப் பொருக்கு இரண்டும் கொண்டு நிரப்பச் சொன்னார்கள். கிழங்குகளை மண்ணுக்குள் புதைத்து ஜலம் விடச் சொன்னார்கள்.
எல்லாம் நல்லபடியாக நடந்தது…
ஆனாலும் தியாகராஜாவுக்கு மட்டுமே என்று சொந்தம் கொண்டாடப்பட்டு வரும் இவை ஸ்ரீமடத்தில் கட்டப்பட்ட தொட்டிகளில் பூக்குமா ? என்னும் கேள்வி எங்கள் மனத்தில் இருந்தது.
இரண்டு மாதங்களில் கொடிகள் நன்றாக வளர்ந்து மூன்று மூன்றாக ஆறு புஷ்பங்கள் ஒரே சமயத்தில் பூத்தன !
தொட்டிகளுக்கருகில் வந்து பார்த்த ஸ்ரீபெரீவா இரண்டை ஸ்ரீசந்த்ரமௌலீச்வரருக்கும், இரண்டை ஸ்ரீகாமாக்ஷீ அம்பாளுக்கும் சார்த்தும்படி உத்தரவிட்டார்கள்..மீதமிருந்த இரண்டையும் ஸ்ரீ தியாகராஜஸ்வாமிக்குச் சார்த்துவது போலத் தன் சிரசில் வைத்துக் கொண்டார்கள்..
மறுபடியும் பூக்கள் தொட்டியில் பூக்கவில்லை...`
சில மாதங்களுக்கு முன் ஸ்ரீபெரீவாளுக்குச் சார்த்துவதற்காக மறுபடியும் செங்கழுநீர், நீலோத்பலம் பயிராக்கினால் என்ன என்று தோன்றியது.கிழங்குகளைத் திருவாரூரிலிருந்து கொண்டு வந்து சின்னத் தொட்டிகளில் இட்டு வளர்த்தோம்...
இரண்டு பூக்களுமே இந்தக் கட்டுரை எழுதும் இன்றைய தினத்தில் பூத்திருக்கின்றன. இரண்டையும் எஜமானுக்கு ஸ்ரீபாத புஷ்பங்களாக அட்டித்தொழுது நமஸ்கரிக்கிறோம்.
எசமானும் தியாகராசாவும் ஒண்ணுதானே !