Sunday, May 27, 2018

அதிர்வேட்டு


அதிர்வேட்டு எப்டி போடுவாங்கன்னு நம்மில் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை..
கவனமா கேளுங்க..
சக்கரங்கள் வைத்த, சிறு கயிற்றால் இழுத்துச் செல்லும்படிக் கட்டப்பட்ட  ஒரு கனமான மரத்துண்டின் மேற்புறம் செங்குத்தாக நான்கு  அல்லது ஐந்து இரும்புக் குழாய்களைச் செருகியிருப்பார்கள்.. அவற்றில் இரண்டிரண்டாக நான்கில்  மட்டும் வெடி மருந்தை இட்டு நன்றாகக் கிடித்துக் கொள்வார்கள்..
ஒவ்வொரு குழாயின் கீழிருக்கும் துளையும் நீளமான  ஒரே கரித்திரியால் இணைக்கப்பட்டிருக்கும்.. வெடி மருந்து இடிக்கப்பட்டு  தயார் நிலையில் இருக்கும்..

ஆழித்தேர் புறப்படத் துவங்கும் சில கணங்களுக்கு முன் ..
லேசாக ஒரிரிரு முறை மெல்லிய தம்பட்டத் தட்டுச்  சப்தம் கேட்கும்.. பக்தர்கள் வடம்பிடிக்கத் தயாராகுவர்..

அந்தக் கணத்தில் ... ஆ ...ரூ.....ரா..... என்ற நீண்ட கணீர் என்ற குரல் கேட்கும்போது .. அதிர் வேட்டுச் சகடையின்  பின்புறம் உள்ள   திரியைப் பற்ற வைத்தவுடன்..
இரு வினாடிகளுக்குள்  படீர் .. படீர் .. என்று போடப்படும் இரட்டை அதிர்வேட்டில் பூமி அதிரும்..
கோபுரங்களின் மேலிருக்கும் பல நூறு பக்ஷிகள்  அதிர்வேட்டு சப்தத்தில் ஆகாசத்தில்  தேரைச் சுற்றிப் பறக்கும்..

வடம் பிடிக்கப்பட்டவுடன் .. மஹாமேருவையொத்த உயரமும்,  வடிவமும் கொண்ட ஆழித்தேர் மெள்ளமாகக் குலுங்கியபடி ...தேர்க் குதிரைகள் வலமிடமாக மெள்ள அசைந்தபடி...   சற்று முன் செல்லும்..

வெகு துரத்தில் இருக்கும் பக்தர்கள் அதிர்வேட்டு சப்தம் கேட்டவுடன் "த்யாகேசா.." என்று கன்னத்தில் போட்டுக் கொண்டபடி தேரிருக்கும் திசை நோக்கி  வடம் பிடிக்க விரைவார்கள்.. .

தேவாசிரியன் மண்டப ஓவியத்தொகுதியில் வஸந்தோத்சவத்  திருநாள் சித்திரத்தில் ஐந்து குழாய்களுடன் கூடிய அதிர்வேட்டுச் சகடை வண்டியைப் பாருங்கள்..

இப்போது சகடை வண்டி மாத்திரம் உள்ளது.. மருந்தைக் கிடித்துப் பற்ற வைக்கும் இரும்புக்குழாய் அமைப்பு இல்லை.. அதற்குப் பதிலாக உள்ளூர் ஆனை வெடிகளைப் பற்ற வைத்து வெடிக்கிறார்கள்...

No comments:

Post a Comment