Monday, March 5, 2018

விச்வரூப தர்சனம் : 1

Image may contain: 1 person, smiling, standing



2004 தீபாவளியன்று தர்மத்தின் வாழ்வை சூது கவ்வியிருந்த அந்த சமயத்தில் வேதபுரியான புதுச்சேரி மண்ணில் தர்மத்தை மீண்டும் வெல்ல வைக்க உள்ளூர் மக்கள் திரண்டனர்.
காரைக்கால் நகரில் முழுக் கதவடைப்பு..
கண்டன ஆர்ப்பாட்டம்.. பொதுமக்கள் நடத்திய மாபெரும் ஊர்வலம்...


பிற்பாடு 2005ம் ஆண்டு... சிதம்பரம் முகாம்.. ஆரூரனிடம்.. "இன்னும் இரண்டு நாட்களில் காரைக்காலுக்கு வரப்போகிறோம்.. ஆனதைச் செய்" என்று மட்டும் சொன்னார்கள்...

காரைக்கால் மாவட்டத்திற்கு எசமான் விஜயம் செய்தபோது....
அம்பகரத்தூர் தமிழகம்-புதுவை எல்லைப் பகுதியிலிருந்து அவர்களின் வாகனத்தின் முன்னும் பின்னும் சுழலும் விளக்குடன் சைரன் பொருத்தப்பட்ட இரு காவல்துறை வாகனங்கள்..


ஒவ்வொரு காவல் நிலையத்தையும் தாண்டுங்கால் அந்தந்தக் காவல்நிலையப் பொறுப்பாளர் நீண்ட விசில் ஒலித்தபடி ஸல்யூட் செய்தனர்..
திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேச்வர ஸ்வாமி ஆலயத்திலும் மற்ற இடங்களிலும் சட்டமன்ற உறுப்பினர்கள், நகரமன்ற மேயர், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றனர்...
ஸ்ரீமடத்திற்கென ஃப்ரெஞ்ச் அரசு சார்பாகப் பல நூற்றாண்டுகளாக வழங்கி வரும் அனைத்து பாரம்பர்ய மரியாதைகளுடன் எசமானரைப் போற்றி வணங்கினர்..

மீனவப் பஞ்சாயத்துகள் ஸ்ரீயவர்களின் வருகையை ஒட்டி எவரும் கடலுக்குப் போகக்கூடாதென்று விடுமுறை அறிவித்து அவர்களைத் தரிசிக்கத் திரண்டு வந்தனர்...

ஹரிஜனங்களும் உரிய மரியாதைகளுடன் தமது கிராமப்பகுதிகளுக்கு அழைத்துச் சென்று கொண்டாடினர்.. அவர்கள் சென்ற இடமெல்லாம் மக்கள் திரண்டு வந்திருந்தனர்...


எசமானரை வரவேற்கும் பொருட்டு "விச்வரூப தர்சனம்" என்ற ஒரே மாதிரியான தலைப்புடன் காரைக்கால் மாவட்டம் முழுவதும் பல வண்ணச் சுவரொட்டிகள்... அலங்கார வளைவுகள்.. இருபது அடி உயரம் கொண்ட அவர்களது திருவுருவப் படங்கள் என..யாவற்றையும்.. அனைத்து ஹிந்து இயக்கங்களைச் சார்ந்த இளைஞர்களும் சிட்டாகப் பறந்து நிறைத்தனர்..
சுனாமியால் பாதிப்புற்ற நாகூர்ப் பட்டினச்சேரி மீனவர்களின் மீள்குடியேற்றத்திற்கு ஸ்தலம் தந்துதவினார்கள். அந்த இடங்களைப் பார்வையிட்டருளினார்கள்.. தக்க தருணத்தில் எசமான் செய்த உதவியை மீனவ சமுதாய மக்கள் பணிவுடன் ஏற்றுப் போற்றினர்.

பிற்பாடு... வாஞ்சியூர் தேவஸ்தானத்திற்கு விஜயம்... சொத்துக்களைப் பார்வையிட்டுத் திரும்பிய சூழலில்.. நேரமின்மை காரணமாக அவர்களுக்குரிய பாரம்பர்ய தேவஸ்தான மரியாதைகளை விரிவாகச் செய்ய முடியாமற் போயிற்று..

ஸ்ரீகாரைக்கால் அம்மையார் திருக்கோயில் மணிமண்டபத்தில் உளுந்து இடக்கூட இடமில்லாத அளவுக்குக் கூட்டம்... சட்டமன்ற உறுப்பினர் AMH நாஜிம்.. அவ்வளவு இடர்ப்பட்ட காலத்திலும் 2004 சுனாமியின்போது ஸ்ரீமடம் சார்பில் எசமான் ஆற்றிய அரும் பணிகளைப் போற்றிப் பேசினார். 

அனைவருக்கும் ப்ரஸாதம் அளித்து அவர்கள் தங்கியிருந்த சுரக்குடி க்ராமத்திற்குத் திரும்ப இரவு வெகு நேரமாயிற்று...

அப்போது வாகனத்திலிருந்து இறங்கி வரும்போது "இரண்டே நாள்தானே டயம் கொடுத்தோம்.. பாவம்.. தூங்கியிருக்கக்கூட மாட்டா.... " என்று தமக்கேயுரிய மந்தஹாஸத்துடன் மெலிதாகத் தமக்குள் சொல்லிக் கொண்டே நடந்து வந்ததை அப்போது அருகிலிருந்த மஹாதேவ ஐயர் என்னும் ஓய்வு பெற்ற ஃப்ரெஞ்ச் அரசு அலுவலர் சொன்னார்..

மறுநாள் அதிகாலை.. " நாகபட்டிணம் வக்கீல் சாம்பசிவ ஐயர்.. பண்டகசாலை க்ருஷ்ணமூர்த்தி ஐயர்.. வக்கீல் NRS போன்ற அனுபவஸ்தர்கள் இருந்து நிர்வாஹம் பண்ணின தேவஸ்தானம்.. வாஞ்சியூர் எஸ்டேட்.. பெரீவாளுக்கு எப்டி மரியாதை பண்ணணும்கூட தெரீல.. அவசரத்ல ஏதோ தெரிஞ்ச மட்டும் பண்ணிட்டோம்.. இன்னும் எவ்வளவோ பெரீசா தங்களுக்குப் பண்ணியிருக்கணும்.. பெரீவா..." என்று சொல்லி மறுபடியும் எல்லா மரியாதைகளையும முன் வைத்து நமஸ்கரித்தபோது ஏற்றுக் கொண்டு ப்ரஸாதம் தந்தார்கள்...

அடுத்த முகாம் கோவிந்தபுரம்...

அங்கும் நல்ல கூட்டம்.. நீண்ட வரிசையில் காத்திருந்து குடும்பத்துடன் சென்று சற்று தள்ளியிருந்து நமஸ்கரித்தபோது... 

தம் அருகிலிருந்த ஒரு வங்கியின் முக்ய பொறுப்பாளரிடம் "இவனை உனக்குத் தெரியுமோ?" என்றார்கள்..
அவரும் உடனே "...." என்றதற்கு..
" அவன் இல்லே.. அவனுடைய தம்பி இவன்..
அவனுக்கு வ்யாபகம் ஜாஸ்தி..
உங்க எல்லாருக்கும் அவனைத்தான் தெரியும்..
இவனை யாருக்கும் தெரியாது..
இவன் நாங்க சொல்லாமல் வெளியில் வரமாட்டான்...
அந்த ஊர்ல Goverment Guest மரியாதையை எப்பவும் கொடுப்பா.. இப்பவும் கொடுத்தா.." என்று சொல்லிப் புன்னகைத்தார்கள்...

No comments:

Post a Comment