Sunday, January 21, 2018

சிதம்பரம்: காஞ்சிப் பெரியவர்களின் பொற்கரங்களால் நிறைவுற்ற ஏழு நூற்றாண்டு காலத் திருப்பணி.

தரிசிக்க முக்தியளிக்கும் ஆகாச ஸ்தலமான  சிதம்பர க்ஷேத்ரத்தில் ஸ்ரீஸபாநாயகர்  திருக்கோயிலின்  நான்காம் ப்ரகாரத்தின் வடமேற்கில்  உள்ளது " பாண்டிய நாயகர்" என்னும் ஸ்ரீமுருகன் ஆலயம்.

ஸ்ரீஸ்காந்த புராணம்- ம்பவ காண்டம் -48வது அத்யாயத்தில்- ஸ்ரீஸுப்ரஹ்மண்யர்  போர் புரியச் செல்லும் முன்  சிதம்பர க்ஷேத்ரத்திற்கு வந்து ஈசனாரை  தர்சனம் செய்துகொண்டு   திருச்செந்தூருக்குச் சென்றது சொல்லப்பட்டுள்ளது .

ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவஸேனையுடன் ஸ்ரீஷண்முகர் கிழக்கு நோக்கிய திருமுகத்துடன் இங்கு எழுந்தருளியுள்ளார்.  ஸ்வாமியின்    திருமுன்பில் மயில் வாஹனம் இருக்கிறது. 


பாண்டிய மன்னனின் குல தெய்வம் ஆதலால்  இங்குள்ள மூர்த்திக்கு "பாண்டிய நாயகர்" என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது. பால்குன மாஸத்தில் ப்ரஹ்மோத்ஸவம் இந்த ஆலயத்திற்கெனத் தனியாக நடைபெறுகிறது.

சோழநாட்டை வெற்றிகொண்ட  ஸுந்தர பாண்டியன், தில்லையில்  பாண்டிய நாயகர்  என்ற திருப்பெயருடன்  ஆறுமுகப்பெருமானுக்கு அழகியதோர் கற்றளியையும்  எழுப்பி,  விஜயாபிஷேகமும், வீராபிஷேகமும் செய்து கொண்டதாக வரலாறு.     


பாண்டிய நாயகர்  ஆலயத்தில்தான்  ஸ்ரீகுஞ்சிதாங்க்ரி ஸ்தவம் இயற்றிய  தில்லை வாழந்தணர்  மரபினரான ஸ்ரீஉமாபதி சிவாசார்யரின் திருவுருவச் சிற்பமும் இருப்பது குறிப்பிடத்தக்கது

1310 ம் ஆண்டு மாலிக் காபூர் படையெடுப்பினாலும், பிற்பாடு
நடந்த கர்நாடக யுத்தங்கள் மற்றும் பிற   முற்றுகைகளினாலும்  அழகிய இக்கற்றளி மிகுந்த பாதிப்புக்குளாகிற்று.  

19ம் நூற்றாண்டில் பரங்கிப்பேட்டையிலிருந்த வணிகர்கள் பெரிதும் முயன்று ஓரளவிற்கு இத்  திருக்கோயிலைப் புதுப்பித்தனர். பிற்காலங்களில் இந்த ஆலயத்தை மீண்டும்  பழைய பொலிவுடன் சீரமைக்கப் பல முறைகள் முயற்சிக்கப்பட்டுள்ளது.  

எனினும்  14-ம் நூற்றாண்டில் அந்நியர் கைகளால்  பெரும் சிதைவுக்காளான பாண்டிய  நாயகர் திருக்கோயிலுக்கு கடந்த 700 ஆண்டுகளில் முழுமையாகத் திருப்பணி ஏதும் செய்யப்படவில்லை.

இந்நிலையில்  சிதம்பரம் பாண்டிய நாயகர் கற்றளியை    முழுமையாக ஜீர்ணோத்தாரணம் செய்ய வேண்டும் .. இத்திருக்கோயில் முன்போல அழகுடன் திகழ வேண்டும் என்ற   ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதிகள் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதீ சங்கராசார்ய ஸ்வாமிகள், பூஜ்யஸ்ரீ சங்கரவிஜயேந்த்ர ஸரஸ்வதீ சங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களின் திருவுளப்பாங்கின் வண்ணம், தில்லை ஸ்ரீஸபாநாயகர் திருக்கோயில் பொது தீக்ஷிதர்களின் முயற்சியில், ஸ்ரீமடத்தின்  ஆதரவுடன் திருப்பணிகள் தொடங்கி, செம்மையுடன் நிறைவுற்று,   22/01/2018 காலை மஹாகும்பாபிஷேகம் சிறப்புடன் நடைபெற உள்ளது.

ஏழு நூற்றாண்டுகளுக்குப் பின்னர்,   
தற்போது பூஜ்யஸ்ரீ காஞ்சிப் பெரியவர்களின்  பொற்கரங்களால்   நிறைவுற்றிருக்கும் பாண்டிய நாயகர் கற்றளித் திருப்பணி... சிதம்பரம் திருக்கோயிலின் வரலாற்றில் என்றும் நிலை பெற்று இருக்கும்.
 

No comments:

Post a Comment