Thursday, November 3, 2016

ஸ்வாமிநாதன்... 2




தங்கக் கொடிமரத்தின் அருகில் வந்ததும் "ஸார்.. ஸ்வாமி அணிந்திருந்த தங்கக் கோவணத்த பாத்தீங்களா..? என்று கேட்டார் உடையார் தம்பி...
கேட்டவர் ஸ்ரீபெரீவா அவர்களைப் பற்றித் தொடர்ந்தார்... 

"டெல்லிலே உத்தர ஸ்வாமிமலை கோவில் கட்டணும்னு அங்கிருந்த தமிழர்கள்..  அரசியல் முக்கியஸ்தர்கள்  எல்லோருமே சேர்ந்து தீர்மானிச்சு.. பெரீயவங்ககிட்டே வந்து அதைத் தெரிவிச்சுக்கிட்டாங்க.. 

மூணு வருஷத்துல மஹாபலிபுரம் ஸ்தபதி மூலமா ஸ்வாமிமலை முருகன் மாதிரி விக்ரஹம் தயார் பண்ணி அப்போ காஞ்சிபுரத்தில் இருந்த பெரீயவங்களிடம் கொண்டு வந்து காண்பிச்சுருக்காங்க..

சிலையருகில் வந்து நின்னு சற்று நேரம் அதை உற்றுப் பார்த்த பெரீயவங்க .. சிலையின் சிரசுப் பகுதியைத்    தொட்டுக் காட்டி - 


"ஸ்வாமிநாத சுவாமிக்கு இருக்கறா  மாதிரி.. சிகை (குடுமி) 
அமைப்பு  இந்த விக்ரஹத்துக்கு இருக்கோ பாரு?" 

- அப்டின்னு ஸ்தபதியைப் பார்த்து உத்தரவாச்சாம்.. 

அப்போதுதான் ஸ்தபதிக்கு ஸ்வாமிநாத சுவாமிக்கு சிரசின் மேற்புறம் இருக்கும் சோழிய முன்குடுமி அமைப்பு மாதிரி தான் வடித்த சிலையில் வைக்கவில்லை என்பது தோன்றியது..எவ்வளவோ பார்த்துப் பார்த்து செய்தும் இரு சிலைகளுக்குள்ளும் ஒரு வித்யாசம் வந்துடுத்தேன்னு ஸ்தபதிக்கு மனசுக்குள் குழப்பம் ஏற்பட்டுப் போச்சு .. 

உடனே பெரீயவங்க புன்முறுவலுடன் -

 "ஸ்வாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமிக்கு இப்டி ஒரு திருவுள்ளம் இருக்கு போல இருக்கு.. அவர் தெற்கில் இருக்கார் .. இவர்.. வடக்கில் .. உத்தர ஸ்வாமிமலையில் இருக்கப் போறார் .. அதனால் அந்தப்பக்கத்து ஆசாரப்படியே அமையட்டும்னு   ரெண்டு விக்ரஹங்களும் நுணுக்கமான ஒரு வித்யாஸம் இருக்கறா மாதிரிப் பண்ணிருக்கார்..அப்டியே இருக்கட்டும்!  " 

 - என்று சொல்லி சுவாமிக்குத் தன் திருக்கரங்களாலேயே விபூதி அபிஷேகம் பண்ணி, பிற்பாடு  ஸ்தபதிக்குரிய பஹுமானங்களையும் செய்து அனுப்பிச்சதா என் தாத்தா சுவாமிநாத உடையார் என்னிடம் சொல்லிருக்காங்க.. " என்று சொன்னார்..

சென்ற 2000மாவது வருஷத்துல.. எங்க தகப்பனார் ராஜகோபால உடையார் தலைமையில் திருப்பணி நடந்து கும்பாபிஷேகம் செய்வதற்குச் சில நாட்கள் இருக்கும்போது  கோயிலுக்கு வந்து திருப்பணி வேலைகளைத் துரிதப்படுத்திக்கொண்டிருந்தார் .. 

அப்போது அங்கு வந்த பெரிய சிவாசாரியார் என் தகப்பனாரை சன்னதிக்குள் அழைத்துச் சென்று   சுவாமிநாதசுவாமியின் இடுப்பில் சார்த்தியிருந்த வெள்ளிக் கௌபீனம்  மிகவும் நாள்பட்டதாகையால் கருத்தும்.. நெளிந்தும் போயிருந்ததைக் காண்பித்து  உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேணுமென்று வேண்டிக்கொண்டார்.

 "இவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையில் எப்படி மாற்று ஏற்பாடு செய்வது..?" என்று யோசித்தபடி என் தகப்பனார்  மலையிலிருந்து இறங்கிக் கீழிருக்கும்  திருக்கோயில் அலுவலத்துக்குள்  வந்து அமர்ந்தார் .. 

"நான்கு நாட்கள்தானே இன்னும் இருக்கு.. அதற்குள் எப்படி ஏற்பாடு செய்வது?" என்று என்னைப்  பார்த்துக் கேட்டார்.

அதேசமயத்தில் திருக்கோயில் அலுவலகத் தொலைபேசியில் என் தகப்பனாருக்கு ஒரு அழைப்பு வந்தது..  காஞ்சி ஸ்ரீமடத்திலிருந்து முக்கியமான மனுஷாள் அப்பாவிடம் பேசவேணுமென்று  எங்கள் இல்லத்திற்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார்கள்.. அப்பா அவர்களிடம் பேசினார் .. 

விபரம் இதுதான்.. 

"ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமி திருமேனியில் எப்போதும் இருக்கறா  மாதிரி ஸ்ரீமடத்திலிருந்து  ஒரு ஆபரணம்  சார்த்த வேணும்.. அதுக்காக  விசேஷமா.. கால் கிலோ எடைக்கு,  புதுசாக  ஸ்வர்ணத்திலே   ஒரு கௌபீனம் செய்து.. ஸ்ரீமடத்தில் இப்போ ரெடியா இருக்கு .. நம்ப தண்ணீர்க்குன்னம் உடையார்தான் அங்கு கோவில்  திருப்பணியை முன்னாடி நின்னு செய்யறார்.. அதனால அவர்கிட்டேயும், சிவாசார்யாள்கிட்டேயும் ஸ்ரீமடத்தின் சார்பில் ஸ்வாமிக்கு ஸ்வர்ண கௌபீனம்  சார்த்தற விஷயத்தைத் தெரிவிக்கணும் என்பதான ஸ்ரீபுதுப்பெரியவாளின்   ஆக்ஞை  விபரத்தை  தங்களிடம் சொல்வதற்காக வந்தோம் !"  

என்று ஸ்ரீமடத்து அன்பர்கள் என் தந்தையாரிடம் தொலைபேசியில் தெரிவித்தனர். 

 " பெரீயவங்க உத்தரவாச்சுன்னா  அது ஸ்வாமிநாதஸ்வாமியின் 
உத்தரவுதான் .. அப்படியே செய்துறலாம்னு எங்க பதிலை 
மஹாசந்நிதானத்தில தெரிவிச்சுடுங்க! " 

என்று பதிலளித்தார் என் தந்தை..

ஸ்ரீபுதுப்பெரியவர்களும்,  ஸ்ரீமடத்துப் பரிவாரங்களுடன் முன்னதாகவே ஸ்வாமிமலைக்கு விஜயம் செய்து ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமியின் கும்பாபிஷேகத்தை விமர்சையாக நடத்திவைத்தார்கள். ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமிக்கு ஸ்ரீமடத்திலிருந்து ஸமர்ப்பிக்கப்பட்ட  ஸ்வர்ண கௌபீனமும் அவர்கள் திருமுன்னிலையில்  சார்த்தப்பட்டு விசேஷ பூஜைகளும் நடந்தேறின." என்று சொல்லி முடித்தார் உடையார் தம்பி.



1 comment:

  1. Swaminatha Sathguruve CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

    ReplyDelete