Tuesday, September 25, 2018

அமெரிக்க விநாயகர்...1

                                       Image result for mahaperiyava pillayar 

புகழ் பெற்ற நூலகத் துறை மேதையான S.R.ரங்கநாதன் அவர்களின்  நூல் ஒன்றை  வாசித்துக் கொண்டிருந்தபோது...

பூஜ்யஸ்ரீ பெரீவா அவர்களுடன் தமக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி அவர் விவரித்திருந்த இச் சம்பவம் கண்ணில் பட்டது...

சீர்காழியைப் பூர்விகமாகக் கொண்ட  S.R. ரங்கநாதன் இந்திய நூலகத் துறையின் முன்னோடி...உலகெங்குமிருந்த பழம்பெருமை மிக்க நூல் நிலையங்களுடனும் நல்ல தொடர்பில் இருந்தவர்...

                   

1932ம்  வருஷத்தில் ஒருநாள்...

S.R.ரங்கநாதன்  பூஜ்யஸ்ரீ பெரீவாளைத்  தரிசிக்க வந்திருந்தார்...

ரங்கநாதனைக் கண்ணுற்ற   பூஜ்யஸ்ரீ பெரீவா அவரைப் பார்த்து...
" வெகுகாலத்திற்கு  முன்பு நம் தேசத்திலிருந்து தற்போதைய அமெரிக்காவிற்குச் சென்றவர்கள்  அங்கு ஹிந்து தெய்வங்களுக்கு கோவில் கட்டியிருக்கிறார்கள் என்பது தெரியுமோ ?" என்று வினவினார்கள்..

அதுவரையிலும் ரங்கநாதனுக்கு  அப்படி ஏதும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை.. அதனால் பதில் தர முடியாமல் மேற்கொண்டு அவர்கள் சொல்வதை எதிர்பார்த்து இருந்தார்..

சற்று நேரம் மௌனம்..

பிறகு, பூஜ்யஸ்ரீ பெரீவா அவர்களே தொடர்ந்தார்கள்...

"அப்படி அந்த நாட்டிற்குப் போய் அங்கேயே  தங்கிவிட்ட நம்ப ஜனங்கள் தங்களுக்காக கோயில்களைக் கட்டிக்கொள்ள வேணுமென்று  நினைத்து தொடங்கியபோது   முதலாவதாக  ஒரு பிள்ளையார் கோயிலைத்தான் கட்டியிருக்கணும்..
அப்படி நம்மவர்களால் வெகு காலத்திற்கு முன்னால் கட்டப்பட்டதாக  பிள்ளையார் கோயில் எதையும் பற்றி அங்கிருக்கும் பழைய ரிகார்டுகளில் ஏதாவது படமோ அல்லது விஷயமோ உன் கண்ணில் பட்டிருக்கா..?"

(தொடரும்)

Wednesday, September 12, 2018

காணாபத்யம் போற்றும் கமலை


கமலாலயத் திருக்குளத்தின் ஈசான்ய முலையில் வீற்றிருக்கும் மாற்றுரைத்த விநாயகர் ..
மாற்றுரைத்து தங்கத்தின் மதிப்பைக் காட்டிய பிள்ளையார் ... இவரை " ஸ்வர்ணாகர்ஷண கணபதி" என்று போற்றுகிறார் ஸ்ரீதீக்ஷிதர்

ஸ்ரீத்யாகேசர் அருளும் ஆரூர்ப் பூங்கோயிலின் வழிபாடு  ஸ்ரீவல்லபா கணபதியிடத்தினின்று தொடங்குவதும்.. ஸ்ரீகமலைப்பராசக்தியின் வழிபாடு  ஸ்ரீஉச்சிஷ்ட கணபதியிடமிருந்து ஆரம்பித்தலும் வெறெந்தத்  தலத்திலும் இல்லாத சிறப்பு..

முதற் பிரகாரத்திலிருக்கும் ஸ்ரீவாதாபி கணபதியை முன்னொரு காலத்தில் சிலர் கலிங்க தேசம் வரைக்கும் எடுத்துப்போனதும்..
அப்போது வாஹனத்தின் அச்சு முறிந்ததும்..
பிற்பாடு வாதாபி வாரணம் ஆரூருக்கே திரும்ப வந்து சேர்ந்ததும் சரித்திரத்தில் காண்பன..

ஸ்ரீஐங்கலக்காசு விநாயகர்
பூங்கோயிலின் எழுந்தருளும் கணபதியார் திருமேனி..
ஐந்து கலம் அளவிற்கான காசுகளைக் கொண்டு உருக்கித்  தூயதாக வார்க்கப்பட்ட விக்ரஹம் என்பர்..
குதிரைக்காரன் கலாபத்தில் ஆரூர்ப் பெருமான் த்யாகர் உட்பட அனைத்து உத்சவ மூர்த்திகளும் பாதுகாப்பிற்காக வேறிடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது இவரைக் கிழக்கில் கடற்கரையோரம் கொண்டு செல்லும்போது அந்நியர் அச்சுறுத்தலால் அடையாளமிட்டுக் கடலினுள் இட்டனர்.. அப்போது தலைகீழாகக் கடலினுள் சரிந்தபோது மேற்கை பாசம்.. அடித்தரையில் பட்டுச் சற்றே வளைந்து போனதை இன்றும் காணலாம்..

மூலாதாரசக்ரமாகிய நான்கிதழ்த் தாமரையில் ஐந்தலையரவின் மீது நிருத்தமிடும் ஸ்ரீமூலாதார கணபதி... திருவாரூரன்றி..   உலகில் வேறெங்கும் காணமுடியாதவர்.
"ஸ்ரீமூலாதாரசக்ரவிநாயக" என்னும் ஸ்ரீராகக்ருதியில் இந்த மூர்த்தியின் பல சிறப்புகளையும்  குறிப்பிடுகிறார் ஸ்ரீதீக்ஷிதர்..


ஹேரம்ப கணபதி 
பஞ்சமுக கணபதி எனவும் அழைக்கப்படுபவர்..
வாதாபி விநாயகரின் அருகில் இருக்கும் மூர்த்தி...
இவரைப் போற்றி மலஹரி ராகத்தில் "பஞ்சமாதங்கமுககணபதிநா" என்றும் தொடங்கும்  கீர்த்தனம் ஒன்றைச் செய்திருக்கிறார் தீக்ஷிதர்..
பஞ்சமுகப் பிள்ளையாரின் (த்யான ச்லோகத்தின்படியான) வடிவமைப்பு அப்படியே இந்த க்ருதியில் பாடப்பெற்றிருப்பது மிகவும் சிறப்பானதாகும்..

ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி...
ஸ்ரீவித்யை வழிபாட்டில் முதன்மையான மூர்த்தி.. ஆரூர் உள்ளிட்ட  மிகச்சில க்ஷேத்ரங்களில் மட்டுமே இவரைத் தரிசிக்க முடியும்..

இவரது வழிபாடு மிகவும் குஹ்யமானது..
மிகச் சிறந்த பலன்களை அதிசீக்ரத்தில் தரவல்லது.. ஆனால் தற்போதைய காலச்சூழலில் முறையற்ற உபாஸனை அபாயகரமானதெனவும் பெரியோர் எச்சரிப்பதுண்டு..

(திருவாரூரில் ஸ்ரீகமலாம்பிகைக்கு  ஆக்னேயத்தில் இருக்கும் ஸ்ரீஉச்சிஷ்ட கணபதியைத் தரிசிக்கும் மந்த்ரஸாதகர்கள் ஒரு சிலர்  அக்ஷரபீடத்தருகில் அமர்ந்து திவ்ய மந்த்ரங்களை ஜபம் செய்வதையும் எனது சிறு பிராயத்தில் கண்டிருக்கிறேன்..)

தீக்ஷிதரவர்களின் "உச்சிஷ்டகணபதிம்" கீர்த்தனையில் இவரின் ஸ்வரூபம், மந்த்ரம், உபாஸிப்போர் அடையும் பலன்கள்.. அழகுறத் தரப்பட்டுள்ளன.

उच्छिष्टगणपतौ भक्तिं
कृत्वोन्नतपदवीं व्रज रे हृदय |

सच्छब्दवाच्यस्वरूपिणि शबलीकृतब्रह्मस्वरूपिणि |
चिच्छक्तिस्फूर्तिस्वरूपिणि चिदानन्दना[द]थस्वरूपिणि ||

नारीयोनिमुखास्वादने नग्नरामक्रियामोदने |
भेरीवीणावेणुवादने भेदाज्ञानध्वान्तसूदने ||

शौरिनुते नतगुरुगुहमदने
सूरिजनयुतश्रीपुरसदने |
दूरीकृतमहादुरितकदने
गौरीशनन्दने गजवदने ||

இரண்டாம் பிரகாரத்தின் கிழக்குப்புறச்சுவரில் காணும் மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய சாசனம் இது..

தைப்பூசத்திருவிழாவன்று பெருமான் ஸ்ரீவீதிவிடங்கதேவர் ஆட்டத்துவெளியில் திருஉலா வரும்போது..
ஸ்ரீமாஹேச்வரர் விண்ணப்பம் செய்தபடி இறைவன் அடியவரான  வீரவித்யாதர பல்லவராயர் என்பார் வேண்ட..
அதையேற்ற ஈசனும்...
தீர்த்தக்குளத்தின் (கமலாலயம்) மேற்புறமிருக்கும் தமது பிள்ளையாகிய திக்கு நிறைந்த விநாயகப் பிள்ளையாருக்கு அர்ச்சனைக்காகவும், திருவமுதுக்காகவும்   வேண்டுவனவற்றை அளிக்கத் திருவாய் மலர்ந்தருளியது பற்றிய கல்வெட்டு இது..

இதில் குறிப்பிடப்படும் திக்கு நிறைந்த விநாயகப் பிள்ளையார் தற்போது கமலாயத் திருக்குளத்திற்குத் தென்மேற்கில் "கூத்தாடும் பிள்ளையார்" என்ற பெயருடன் அழகுறத் திகழ்கின்றார்..

ஸ்வேதவிநாயகர்...

ஸ்ரீஸ்காந்தபுராணத்தின் ஒரு பகுதியான நாகரகாண்டம் கமலாலய க்ஷேத்ர மாஹாத்ம்யத்தில்  நளசக்ரவர்த்திக்கு சனீச்வரனால்  ஏற்பட்ட  உபாதை தீர அவர் ஸ்நானம் செய்ததாகக் குறிப்பிடப்படும் நளதீர்த்தக் குளத்தின் வாயு திக்கில் இருக்கும் பிள்ளையார் இவர்..
வெள்ளைக் கல்லால் ஆன மூர்த்தி..

ஓடம்போக்கியாற்றிலிருந்து சாலைக்காரத்தெரு வழியாகப் பாய்ந்த ஓடையொன்றின் தென்கரையில் அமர்ந்திருக்கும்  இவர்க்கு "ஓடைக்கரைப் பிள்ளையார்" என்ற பெயர் ஏற்பட்டு அதுவே பிற்பாடு ஓட்டைப்பிள்ளையார் என வழங்கலாயிற்று.. அதனால் நள தீர்த்தமும் தற்போது ஓட்டைக்குளம்  என்றே அழைக்கப்படுகிறது,..

நளதீர்த்த ஸ்நானம்... சர்மநோயைப் போக்கும்  என்பது புராணங்களில் கண்டது...

அருகிலிருக்கும், நளேச்வரர் திருக்கோயிலில் உள்ள  பல்லவர் காலத்திய மாத்ருகணத்தொகுதியில் இவரும் ஒருவராக இருந்திருக்கக் கூடும்...

கமலையில் இருக்கும் கணபதிகளின் எண்ணிக்கை... மொத்தம் ஐநூறு.. வேறெந்த தலத்துக்கும் இந்தப் பெருமை கிடையாது..

திருவாரூரின் தென்கிழக்கில்  கபிலநதிக்குத் தெற்கில் உள்ள பகுதி... விஜயபுரம்..
ஸ்ரீநீலோத்பலாம்பிகையின் அருகில் குழந்தை ஸ்கந்தனைத் தனது  தோளில் சுமந்திருக்கும் அம்பிகையின் சேடி "விஜயை" என்ற குள்ளவடிவுடையோள்..
விஜயை  வழிபட்டதால் "விஜயபுரம்" என்ற பெயர் உண்டாயிற்று என்பார் உ.வே.சா.

கமலையைக் காத்தருளும் கணபதிகளில் ஐநூறாமவர் விஜயபுரத்தில் இருக்கிறார்.
இவருக்கும் "ஐநூற்றுப்பிள்ளையார்" என்றே பெயர் வழங்குவது குறிப்பிடத்தக்கது...


நடுக்கம் தீர்த்த வினாயகர்...

பராசக்தி  விராட்புருஷனைத் தனது பீடாஸனமாக்கி அவனது ஹ்ருதய கமலத்தில் அமர்ந்ததால் ஸ்ரீகமலாம்பிகை என்ற பெயர் உண்டாயிற்று.

அப்போது அம்பிகையின் திருமேனியில் ஒருவித நடுக்கம் ஏற்பட்டபோது..அதைத் தீர்க்க ஸ்ரீவினாயகர் உற்பத்தியானார். அன்னையின் மடியிலமர்ந்தார்.. நடுக்கமும் நின்றது..

வினாயகருக்கு " நடுக்கம் தீர்த்த கணபதி" என்ற பெயரும் வழங்கலாயிற்று.

இவ்வினாயகர் சன்னதி  கமலைப் பராசக்திக்குத் தென் கிழக்கில் அமைந்துள்ளது.

திருவாரூர் திருக்கோயிலில் இருக்கும் பதினாறு விநாயகர்கள்..










Sunday, June 17, 2018

திருவாரூர் - பஞ்சக்ரோச ப்ரதக்ஷிணம்


ஸ்ரீஸ்காந்த புராணம் நாகர கண்டம்  கமலாலய க்ஷேத்ர மாஹாத்ம்யத்திற் சொல்லியுள்ளபடி திருவாரூர் ஸ்தலத்தை  பஞ்சக்ரோச ப்ரதக்ஷிணம் செய்யும் முறை..

கமலாலயத் திருக்குளத்தில் இருக்கும் 64 தீர்த்த கட்டங்களிலும் படிந்து,  ஆரூர் ஆதியை வணங்கி வலமாக .. 

கிழக்கில் கயா சீர்ஷம் என்னும் ராமகே (கேக்கரை), 
தெற்கில் தக்ஷிண கோகர்ணம் என்னும் புலிவலம் (வ்யாக்ர ப்ரதக்ஷிணம்), 
மேற்கில் க்ருஷ்ணமங்கள க்ஷேத்ரம் என்னும் திருக்கண்ண மங்கை , 
வடக்கில் உத்தர கோகர்ணம் என்னும் வண்டாம்பாலை  
(விறன்மிண்டர் கதையில்.. த்யாகேசர் தாண்டிக் குதித்தபடித் தாம்  திருவாரூர் எல்லைக்குள் வந்து விட்டதை "வந்தோம் இப்பாலே" என்று சொல்லிய  இடம்) ..

இப்படியாக வலம் வந்து திருவாரூர் அடைந்து  
அசலேசம், ஹாடகேசம், ஆனந்தேசம்,  சித்தீசம்,  வன்மீகர், வீதிவிடங்க த்யாகர், கமலாம்பிகை, அல்லியங்கோதை உள்ளிட்ட மூர்த்திகளை வணங்கி, அடியார்களுக்கு விதிப்படி தானங்களை அளித்து பஞ்சக்ரோச யாத்திரையைப்  பூர்த்தி  செய்ய வேண்டியது... 

எஜமானர்களின் திருவாணைப்படி  பூஜ்யஸ்ரீ ஓடாச்சேரி ஸ்வாமிகள் அவர்கள் இயன்றபோதெல்லாம் அடியவர்களைச் சேர்த்துக்கொண்டு  நாகர கண்டத்தைச் சொல்லியபடியே இப்படி வலம் வருவார்.. 

தன்னுடைய மாட்டைத் தேடிக்கொண்டு போன ஒருவன்..
தான்  அறியாமலே  சமத்காரபுரம் என்னும் இந்த நகரத்தின் பஞ்சக்ரோச  எல்லையைச் சுற்றி வந்ததாலேயே  பெரும் புண்ணியம் அடைந்து தனது அடுத்த  ஜன்மத்தில் மன்னனாகப் பிறந்தான்..

ஸ்ரீதூர்வாஸ மஹாமுனிவர் இங்கு வந்து...
பஞ்சக்ரோச எல்லைக்குள்ளாக  'ஸ்ரீபுரம்' என்னும் அழகிய நகரத்தை ஏற்படுத்தி, அதைச் சுற்றிலும் மஹாபத்மாடவியை அமைத்து,  அதனுள் ஸ்ரீகமலாம்பிகையை எழுந்தருளவைத்து  விதிப்படி  பூஜித்தனர் என்பது வரலாறு.. 

Thursday, June 7, 2018

ராமபத்ர ரா.. ரா..


இன்று  " ராமபத்ர ராரா" என்னும் ஸ்ரீபத்ராசல ராமதாசரின் கீர்த்தனையைக் கேட்க நேர்ந்தது... கீர்த்தனையைக் கேட்கும்போதே   பழைய நினைவுகள் மனதிற்குள் தோன்றலாயின...

அப்போது...
பூஜ்யஸ்ரீ புதுபெரியவாள் அவர்களின் திருவுளப்படி...  பூஜ்யஸ்ரீ பாலபெரியவாளை முதன்முதலாக  தஞ்சை ஜில்லாவிற்கு  அழைத்துவந்து  ஒவ்வொரு பெரிய நகரத்திலும்  அவர்களுக்குப் பட்டணப்ரவேசம் செய்துவைத்தார்கள் ஸ்ரீமடத்தின் சிஷ்யர்கள்... 

ஊருக்கு ஊர்  போட்டி போட்டுக்கொண்டு  மேன்மேலும்  சிறப்பாக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.. 

முதலில் சிதம்பரம் .. 
அடுத்தது சீர்காழியில் .. 
நெப்பத்தூர் பாலு ஐயர்.. டாக்டர் கோதண்டராம ஐயர்..  தங்குடு டாக்டர், எஸ்டேட் முதலியார்  கடைக்கண் விநாயகநல்லூர் துரைராஜ பிள்ளை உள்ளிட்ட அந்த வட்டாரத்தில் மிகப்பிரபலமான பெரிய  மனிதர்கள் அடங்கிய வரவேற்புக் குழு ஐம்பது நாகஸ்வர வாத்யக்காரர்களை ஏற்பாடு செய்து பட்டணப்ரவேசம் விட்டார்கள்..   

ஊர்வலத்தின் நிறைவில் அருகில் வந்துகொண்டிருந்த ஆரூரனின்  தகப்பனாரைப் பார்த்த  பூஜ்யஸ்ரீ பாலபெரியவாள் அவர்கள் 'அடுத்த மூன்று  நாட்களில்  திருவாரூரில் கேம்ப்   ஏற்பாடாயிருக்கு போலிருக்கே.. அங்கே எவ்ளோ நாகஸ்வரம் வரப்போறது ?' என்று  விளையாட்டாகக் கேட்டார்கள்.. 
அதற்கு ' எல்லாம் பெரிவா அனுக்ரஹம்" என்று மட்டும் சொல்லிக்கொண்டார் ஆரூரனின்  தகப்பனார்...

அன்றிரவே சீர்காழியிலிருந்து திருவாரூர் திரும்பியாயிற்று .. வரும் வழியெங்கும் ' இடையில் இருக்கும் மூன்று நாட்களுக்குள் எப்படி சீர்காழியைத் தாண்டி  நம்ப ஊரில் ஏற்பாடு செய்வது ?" என்று கவலைப்பட்டுக் கொண்டே வந்தார்..

மறுநாள் காலை எட்டு மணி இருக்கும் .. திருவாரூர் கோயில் ப்ரதான நாகஸ்வரக்காரரான பாரிநாயனம் வித்வான் செல்வகணபதி பிள்ளை தற்செயலாக வீட்டுக்கு வந்தார் ..   

பூஜ்யஸ்ரீ ஆசார்யர்களின் திருவாரூர் விஜயத்தைப் பற்றிக் கேட்டதும்  " என்னால் இயன்ற அளவு எங்க மனுஷாளைக் கொண்டாந்துடறேன் " என்று மிகுந்த விநயத்துடன் சொல்லிச் சென்றார்.. 
அத்துடன் இந்த விஷயத்தை மறந்து விட்டு அடுத்த ஏற்பாடுகளை பார்க்கலாயிற்று..

மூன்றாவது நாள்...
பூஜ்யஸ்ரீஆசார்யர்களும் திருவாரூர் எல்லைக்குள் விஜயமானார்கள் ...
முதலில் ஸ்ரீத்யாகராஜஸ்வாமியை  தர்சித்துக்கொண்டு ஸ்ரீமாற்றுரைத்த விநாயகர் கோயிலில் பட்டண ப்ரவேசம் தொடங்கிற்று.. 
அதுவரையிலும் கமலாலயத்தின் படித்துறைகளில் ஆங்காங்கு இருந்து கொண்டு தங்கள் வாத்தியங்களை தயார் பண்ணிக் கொண்டிருந்த  நாகஸ்வர வித்வான்கள் தங்களது செட்டுகளுடன் விரைவாக அங்கு வந்து சேர்ந்து கொண்டனர்...அவர்களில் பலரும் வ்யாஸ பூஜை உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு ஸ்ரீமடத்திற்கு ந்து வாசிக்கும் வழக்கம்  உடையவர்கள்..

முதலில் மல்லாரி வாசிக்கத்  தொடங்கினார் திருக்கோயில் வித்வான் செல்வகணபதி பிள்ளை..
அவ்வளவுதான்...
ஏராளமான நாகஸ்வர வித்வான்களின் மல்லாரி மற்றும் தவில் முழக்கம் கமலாயக் குளக்கரையில் பட்டு மேலக்கோபுரத்திலும் பெரிய கோயில் மதிலிலும் எதிரொலித்தது .. 
எத்தனை நாகஸ்வரக்காரர்கள்  வந்திருக்கிறார்கள் என்று எண்ணக்கூட முடியவில்லை.. அந்த அளவிற்கு மக்கள் கூட்டம்.. அவ்வளவு நெரிசல்... 

அருகிலிருந்த ஆரூரனின் தகப்பனாரை   சமிக்ஞையால் அழைத்த பூஜ்யஸ்ரீ பாலபெரியவாள்  புன்சிரிப்புடன் ... 
 "இங்கு வந்திருக்கும் வித்வான்கள் மொத்தம் எத்தனை பேர் ?" என்று கேட்டார்கள்.. 
அதுவரை வந்திருந்தவர்களை எண்ணிப்பார்க்காத அவரும் பணிவுடன் "இன்னும் எண்ணலே பெரிவா..எல்லாம் பெரிவா அனுக்ரஹம்" என்று சொன்னார்...

அன்று மட்டும்  தஞ்சாவூர் ஜில்லாவில் இருந்த பிரபல நாகஸ்வர வித்வான்கள் மொத்தம் 108 பேர்.. தவில் வித்வான்கள் மொத்தம் 216 பேர் ஆக மொத்தம் 324 பேர் பூஜ்யஸ்ரீ ஆசார்யாளின் திருவாரூர்  பட்டணப்ரவேசத்தில் கலந்து கொண்டு இசைமழை  பொழிந்தார்கள்..   தாளம், ச்ருதிப்பெட்டி, ஒத்து வாசித்தவர்களையும் உடன் வந்தவர்களையும் சேர்த்தால்   மொத்த கலைஞர்கள் 400 பேருக்கும் மேல் இருந்திருப்பார்கள்  

செல்வகணபதி பிள்ளை தொலைபேசியில் விஷயத்தைச் சொன்னதும்..  அவரவர்களும்  மற்றவர்களிடமும் சொல்லி அழைத்துக் கொண்டு அன்று  இத்தனை பேரும் ஒன்றாகத் திரண்டு   வந்திருக்கிறார்கள். 

வெகு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த மிக நீண்ட ஊர்வலம் நிறைவாக துர்காலயா சாலையிலிருக்கும் ஆரூரனின்  இல்லத்தை அடைய இரவு வெகு நேரமாயிற்று...

ஜாகைக்குள் ப்ரவேசமாகும் முன் " மங்களம் வாசித்து முடிச்சுடலாங்களா?" என்று கேட்டார் செல்வகணபதி பிள்ளை.. சற்று தொலைவிலிருந்தும்   பூஜ்யஸ்ரீ பால பெரியவாள்  அவர் கேட்டதைக்  கவனித்துவிட்டு   ஆரூரனைக்  கூப்பிட்டு... "'ராமபத்ர ரா...ரா'  வாசிச்ச பிற்பாடு மங்களம் வாசிக்கச் சொல்லு" என உத்தரவாயிற்று  .. 

எசமான் திருவுளக்குறிப்பையறிந்ததும் வித்வான்கள் இன்னும் விசேஷமாக அந்த கீர்த்தனையை விஸ்தாரமாக வாசித்து நிறைவு செய்தார்கள்.. 

அனைவருக்கும் பூஜ்யஸ்ரீ  பெரியவாள்  ப்ரஸாதம், ஸன்மானங்களையும் வழங்கி அருளினார்கள்...

அக்காலத்தில் திமிரி  நாகஸ்வரம் மட்டுமே ஸ்ரீமடத்தில்  வாசிக்கும் வழக்கம் இருந்தது.. அதேவிதமாக பாரி நாகஸ்வரம் மட்டுமே வாசிக்கப்படும் வழக்கம் திருவாரூரில் உள்ளது.. 

'மறுநாள் ஸ்ரீமஹாத்ரிபுரசுந்தரீ ஸமேத ஸ்ரீசந்த்ரமௌலீச்வர ஸ்வாமியின் பூஜைக்கு திருவாரூர் ஸம்ப்ரதாயபடி பாரி நாகஸ்வரம்  வாசிக்கவேணும்' என்ற பூஜ்யஸ்ரீ
பாலபெரியவாளின் திருவுளப்பாங்கைத்
தெரிந்து கொண்ட செல்வகணபதி பிள்ளையும் அவ்வண்ணமே மூன்று காலங்களுக்கும் கொடுகொட்டியுடன் பாரி நாயனம் வாசித்து நிறைவு செய்தார்...

ராமபத்ர ரா.. ரா.. கீர்த்தனையைக் கேட்டு முடிப்பதற்குள் இத்தனை நிகழ்வுகளும் மனதிற்குள் மலர்ந்து விரிந்துவிட்டன... 

( பூஜ்யஸ்ரீ பாலபெரியவாள் அவர்களின் பொன்விழா ஆண்டையொட்டி எழுதப்பட்டது)
  

திருவாரூர்த் திருவீதிகள்


 'படர்ந்த பேரொளிப் பன்மணி வீதிபார் 
இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார் 
தொடர்ந்து கொண்டவன் தொண்டர்க்குத் தூதுபோய் 
நடந்த செந்தா மரையடி நாறுமால்
என பெரியபுராணம்  திருநகரச் சிறப்பில் பாடுகிறார் ஸ்ரீசேக்கிழார் ஸ்வாமிகள்.

ஸ்ரீத்யாகேசர், வன்தொண்டர் நம்பிஆரூரருக்காகப்  பரவை நாச்சியாரது திருமனைக்கு  தூது நடந்தபோது அவரின் திருவடித் தாமரைகள் தோய்ந்த வீதியே   'திருவடிப்போது நாறிய திருவீதி'(1) என்று வழங்கப்பட்டது..

இவ்விடம்  துர்க்கை அம்மன் சன்னதித்தெரு என வழங்கப்படுகிறது..இங்கு இருந்த  பரவையார் திருமனையே  தற்போது ஸ்ரீஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின்  திருக்கோயிலாக உள்ளது. 

திருவாரூரில் ஆழித்தேரோடும்  நான்கு திருவீதிகளில் ஒன்றான தெற்குவீதியை அணிமுடிநெடிய திருவீதி(2) எனவும், அதற்குத் தெற்கில்  இருப்பதை  பொன்பரப்பிய  திருவீதி(3) எனவும்,  அதற்கும் தெற்கில் இருக்கும் வீதியை புகழாபரணத்  திருவீதி(4) எனவும் கூறுவர்.. 

பொன்பரப்பிய  திருவீதியின் நடுவில் இருப்பது குமரக்கோட்டம் (5).. குமரக் கோட்டத்தின் கிழக்கில் இருக்கும் பகுதி தற்போது குமரக்கோயில் தெருவென்றும.. மேற்புறம் இருக்கும் தெரு செட்டித்தெரு (V.S,தெரு)வென்றும் வழங்கப்படுகிறது..  

புகழாபரணத்  திருவீதியின் தற்போதைய பெயர் காரைக்காட்டுத்தெரு ஆகும்... 

Sunday, May 27, 2018

அதிர்வேட்டு


அதிர்வேட்டு எப்டி போடுவாங்கன்னு நம்மில் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை..
கவனமா கேளுங்க..
சக்கரங்கள் வைத்த, சிறு கயிற்றால் இழுத்துச் செல்லும்படிக் கட்டப்பட்ட  ஒரு கனமான மரத்துண்டின் மேற்புறம் செங்குத்தாக நான்கு  அல்லது ஐந்து இரும்புக் குழாய்களைச் செருகியிருப்பார்கள்.. அவற்றில் இரண்டிரண்டாக நான்கில்  மட்டும் வெடி மருந்தை இட்டு நன்றாகக் கிடித்துக் கொள்வார்கள்..
ஒவ்வொரு குழாயின் கீழிருக்கும் துளையும் நீளமான  ஒரே கரித்திரியால் இணைக்கப்பட்டிருக்கும்.. வெடி மருந்து இடிக்கப்பட்டு  தயார் நிலையில் இருக்கும்..

ஆழித்தேர் புறப்படத் துவங்கும் சில கணங்களுக்கு முன் ..
லேசாக ஒரிரிரு முறை மெல்லிய தம்பட்டத் தட்டுச்  சப்தம் கேட்கும்.. பக்தர்கள் வடம்பிடிக்கத் தயாராகுவர்..

அந்தக் கணத்தில் ... ஆ ...ரூ.....ரா..... என்ற நீண்ட கணீர் என்ற குரல் கேட்கும்போது .. அதிர் வேட்டுச் சகடையின்  பின்புறம் உள்ள   திரியைப் பற்ற வைத்தவுடன்..
இரு வினாடிகளுக்குள்  படீர் .. படீர் .. என்று போடப்படும் இரட்டை அதிர்வேட்டில் பூமி அதிரும்..
கோபுரங்களின் மேலிருக்கும் பல நூறு பக்ஷிகள்  அதிர்வேட்டு சப்தத்தில் ஆகாசத்தில்  தேரைச் சுற்றிப் பறக்கும்..

வடம் பிடிக்கப்பட்டவுடன் .. மஹாமேருவையொத்த உயரமும்,  வடிவமும் கொண்ட ஆழித்தேர் மெள்ளமாகக் குலுங்கியபடி ...தேர்க் குதிரைகள் வலமிடமாக மெள்ள அசைந்தபடி...   சற்று முன் செல்லும்..

வெகு துரத்தில் இருக்கும் பக்தர்கள் அதிர்வேட்டு சப்தம் கேட்டவுடன் "த்யாகேசா.." என்று கன்னத்தில் போட்டுக் கொண்டபடி தேரிருக்கும் திசை நோக்கி  வடம் பிடிக்க விரைவார்கள்.. .

தேவாசிரியன் மண்டப ஓவியத்தொகுதியில் வஸந்தோத்சவத்  திருநாள் சித்திரத்தில் ஐந்து குழாய்களுடன் கூடிய அதிர்வேட்டுச் சகடை வண்டியைப் பாருங்கள்..

இப்போது சகடை வண்டி மாத்திரம் உள்ளது.. மருந்தைக் கிடித்துப் பற்ற வைக்கும் இரும்புக்குழாய் அமைப்பு இல்லை.. அதற்குப் பதிலாக உள்ளூர் ஆனை வெடிகளைப் பற்ற வைத்து வெடிக்கிறார்கள்...

Tuesday, May 22, 2018

தர்ம ராஜ்யம் ..4 : டபீர் பண்டிதர்


Related image

தஞ்சை மன்னர் பிரதாபஸிம்ஹரின் அமைச்சர்..
அரசு மற்றும் நிதி நிர்வாகத்தில் திறமை வாய்ந்தவர்
பழைய முகலாயர் காலத்து நில அளவை முறைக்கு மாற்றாகப் புதிய முறையை ஏற்படுத்தித் தஞ்சை அரசின் வருவாயையும், குடிகளின் நலனையும் பெருக்கியவர்..         
ப்ரதாபஸிம்ஹர் மற்றும்  டபீர் பந்த் ஆகியோரின் மேலான ப்ரார்த்தனையை ஏற்று, கலாப காலத்தில் காஞ்சியிலிருந்து தஞ்சை சீமைக்கு விஜயம் செய்த ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடத்தின் 62வது ஆசார்யர்களான  பூஜ்யஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர  ஸரஸ்வதீ சுவாமிகள் அவர்கள் (1746-1783A.D) காவிரி தீரத்தில் வாஸம் செய்யவேணும் என்று எண்ணியதற்காகக்  கும்பகோணத்தில்  காவிரியின் தென்கரையில் பகவத் படித்துறையருகில்  பூர்விகமாக ஸ்ரீமடத்துக்கிருந்து வந்த கிளை மடத்தை விரிவாக்கித் தந்தவர்.. அருகில் டபீர் அக்ரஹாரத்தையும், குளமொன்றையும் ஏற்படுத்தியவர்.. 
                       Image result for tanjore pratapa simha
நவாப் ஆட்சிக்காலம் வரைக்கும்  தஞ்சை ராஜ்யத்தில் ஸ்ரீமடத்திற்கு ஆங்காங்கு இருந்த நில வருமானங்களை  வசூல் செய்வதில் இருந்து வந்த நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு  ஒவ்வொரு சுபாவிலும்  ஸ்ரீமடத்திற்குச் சேரவேண்டிய நிலவருமானத் தொகையைக் கணக்கிட்டு  அரசு அதிகாரிகள் மூலம் நேரடியாகக் கொண்டு செலுத்தப்படும் முறையை இவர் ஏற்படுத்தினார்..
இதையொத்த வசூல் முறை ஏற்படுத்தப்படாத காரணத்தால்தான்  செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆற்காடு பிரதேசங்களில்  ஏறக்குறைய 750 க்ராமங்களில் வருஷாந்தர விளைச்சலில் ஸ்ரீமடத்துக்கு இருந்து வந்த "மேரை" என்னும் பங்கை வசூலிப்பதில் பிற்காலங்களில் முட்டுப்பாடு ஏற்பட்டது..  தொண்டைமண்டல க்ராமங்களிலிருந்து, ஸ்ரீமடத்திற்கும், பிற தேவஸ்தானங்களுக்கும் சேரவேண்டிய விளைச்சல் பங்கும்  அறவே நின்று போனது..
ஆனால், டபீர் பண்டிதரின் நிர்வாகத் திறமையால்  ஸ்ரீமடத்திற்கு " வேலி  குறுணி"   என்னும் விகிதத்தில் 18-19 நூற்றாண்டுகளில்  நிலையான வருமானம்  தொடர்ந்து கிடைத்தமை பற்றி  மராட்டிய மோடி ஆவணங்கள் நமக்கு அறிவிக்கின்றன..

டபீர் பண்டிதருக்கு பசுக்களை பராமரிப்பதில் ஈடுபாடு அதிகம் இருந்ததாம்.. அவரே  நேரடியாக கோசேவையில் ஈடுபடுவாராம்..ஒருமுறை, அரசங்க அலுவல் காரணமாகக் கொட்டிலில் இருந்த பசுக்களுக்குத் தண்ணீர் காட்டச் சற்று தாமதமாகி விட்டதாம்.. கோமாதாவிற்குத் தாம்  பெரிய  அபராதம் இழைத்து விட்டதாகப் பெரிதும் வருந்தினாராம் பண்டிதர்..

இப்பெரும் பாவத்திற்கு பிராயசித்தமாகத்  தஞ்சை  விஜய ராமர் கோயிலையும்,  டபீர் குளத்தையும் அமைத்தாராம்.. விஜயராமருக்கு 'ப்ரதாப ராமர்' என்ற பெயரும் உண்டு. இங்கு  "கணேச லீலார்ணவம்" நாடகம் நடிக்கப்பட்டதாகவும் அறிகிறோம். இக்கோயிலை "டபீர் ராமசாமி கோயில்" என்றே  தஞ்சை மக்கள்   இன்றும்  அழைக்கின்றனர் 

Friday, May 11, 2018

தர்மராஜ்யம்...3

தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மாமன்னர் பல்கலை வித்தகர்.. வைத்ய சாஸ்த்ரத்தில் மிகுந்த தேர்ச்சியும் உடையவர்.. அக்காலத்தில் இருந்த ஆயுர்வேத , சித்த மற்றும் மேற்கத்திய வைத்ய சாஸ்த்ர நிபுணர்கள் பலரும் அவரது அவையை அலங்கரித்தனர்.. எண்ணிலாத அரிய வைத்ய நூல்கள் மற்றும் சித்திரங்களையும் தமது சரஸ்வதி மஹால் நூலகத்தில் சேகரித்து வைத்திருந்தார்..

ஒருசமயம் சரபோஜி மஹாராஜாவுக்கு மனித உடலின் உட்புற உறுப்புகளைக் காணவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாம்..
வைத்ய சாஸ்த்ரங்களில் ..மனித சடலத்தைத் தர்ப்பைப் புல்லால் மூடிக் கட்டிக் கொண்டுபோய் ஆற்று நீரில் மூழ்க வைத்து.. பிறகு சில நாட்கள் கழித்து அழுகிய சடலத்தின் தோலை மெதுவாகச் சுரண்டி எடுத்து வீங்கிய நிலையில் பார்வைக்குப் புலப்படும் நரம்புகளையும் மற்ற உள்ளுறுப்புகளையும் தனித்தனியாகக் கண்டு கொள்ளும்படி சொல்லியிருக்கிறது என்றாலும், இம்முறையானது மன்னரின் கடுமையான ஆசாரத்திற்குப் புறம்பானது என்பதால் இவ்விதம் ஏற்பாடு செய்ய அவருக்கு மனமில்லை.
.
எனவே, இங்கிலாந்திலிருந்து யானைத் தந்தத்தினால் செய்யப்பட்ட ஒரு மனித எலும்புக்கூட்டைத் தஞ்சைக்கு வரவழைத்து விட்டார்.. அரண்மனையில் சுமார் ஐந்தரை அடி உயரமும் 104 கிலோ எடையும் கொண்ட அந்த எலும்புக்கூட்டைப் பார்த்தவர்களுக்கு அது யானைத் தந்ததினால் ஆனது என்பதை நம்பவே முடியவில்லையாம்...

சில ஆண்டுகள் கழித்து மேலும் ஒரு ரோஸ் உட் மரத்தினால் ஆன எலும்புக்கூட்டையும் தஞ்சாவூருக்கு வரவழைத்து விட்டார் சரபோஜி மஹாராஜா ...

 இவ்விரண்டு எலும்புக் கூடுகளையும் வைத்துக்கொண்டு தஞ்சை ராஜ்யத்திலிருந்த வைத்யர்கள் தமது ஆராய்ச்சிகளை செய்ய உதவினார் மஹாராஜா..

தஞ்சை ராஜ்யம் மறைந்த பிற்பாடு  இவ்விரண்டு அரிய கலைப் பொருட்களும் வெறும் 75 ரூபாய்களுக்கு விற்கப்பட்டுவிட்டனவாம்...

தற்போது இந்தியாவிலிருக்கும் இவ்விரு எலும்புக்கூடுகளையும் 1970ம் ஆண்டு லண்டனில் நடந்த பொருட்காட்சியில் ஒருவாரம்  வைப்பதற்கு  வாடகையாக வெள்ளைகாரர்களிடம் ஐந்து லட்சம் ரூபாயை வசூலித்து விட்டார்கள் நம்ப ஆசாமிகள் என்பது வேறு கதை...

Monday, March 5, 2018

விச்வரூப தரிசனம்...II

1995ம் ஆண்டு..எசமானர்களின் சோழமண்டல யாத்திரை.. மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள்,  காரைக்கால் முக்கியஸ்தர்கள் ஏற்பாட்டில்  மாபெரும் வரவேற்பு நடந்தது.

இரண்டு நாட்கள் முகாமிட்டு பிறகு  எசமானர்கள் திருமலைராயன் பட்டினம் வழியே  வாழ்மங்கலம் தமிழக எல்லையில் இருக்கும் செக் போஸ்ட்டைக் கடந்து திருவாரூரில் இரவு தங்குவதாக ஏற்பாடு..

காரைக்கால்  முயல் மார்க் ரைஸ் மில் வளாகத்திலிருந்து எசமானர்கள் இருவரும் புறப்பட்டு பாரதியார் வீதியில் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் அப்போதைய  அமைச்சர் சந்திரகாசு, காவல்துறை கண்காணிப்பாளர் பரம்ஜித்சிங், காரைக்கால் மண்டல நிர்வாகி மாத்யூ சாமுவேல், ஊர்  முக்கியஸ்தர்களின் வாகனங்களும் வந்து கொண்டிருந்தன.

ஆரூரனுக்கு அந்த ஊரில் அலுவலகம் ஏற்படுத்தித் தந்து சில காலம்தான் அப்போது ஆகியிருந்தது.

வீதியின் ஓரமாக எசமானரை வணங்கி நமஸ்கரித்ததும் .. தமது திருக்கரத்தை உயர்த்திக்  காட்டினார்கள்,,, வாகனத்தில் இருந்தபடியே மேலே இருந்த அலுவலகத்தின் பெயர்ப் பலகையையும்  வாசித்துவிட்டார்கள்..

சட்டென்று  முன்னால் இருந்து வாகனத்தை ஓட்டி வந்த ஸ்ரீசீதாராம ஐயரிடம் வாகனத்தை நிறுத்தத் சொல்லிவிட்டு இறங்கி விடுவிடுவென்று மாடிப்படிகளில் ஏறி அலுவலகத்துள் வந்து அங்கிருந்த எசமானர்களின் திருவுருவப்படங்களுக்கு புஷ்பம் சார்த்தி, குங்குமத்தை தமது கை நிறைய அள்ளி சுற்றிலும் இருந்த சாதனங்களின் மீது இட்டார்கள்.. ப்ரஸாதம் கொடுத்தார்கள்...

அப்போது ஆரூரனின் பெற்றோர் திருவாரூர் முகாம் வேலைகளை ஏற்பாடு செய்வதற்காக முன்னதாகச் சென்றுவிட்டபடியால்  ஸ்ரீமடம்  முக்யஸ்தரான முதியவர் திருத்துறைப்பூண்டி ஸ்ரீராஜம் ஐயர் மட்டுமே அங்கிருந்தார்.

அவரிடம்-
" நம்ப பையன் தன்னந்தனியா புது ஊர்ல தைரியமா வந்து ஆஃபீஸ் போட்ருக்கான்.. நிறைய வேலை பார்த்துண்டு நன்னா இருக்கணும்" என்று சிரித்தபடியே  சொல்லிவிட்டு  வேகமாகக் கீழிறங்கித் தம் வாகனத்தில் ஏறிவிட்டார்கள்..

சுற்றிலும் இருந்த விஐபி-களுக்கு சற்று நேரம் என்ன நடந்ததென்றே  அறியக்கூடவில்லை..
என்னவென்று அறிய  பலருக்கு ஆர்வம்...
ஒரு சிலருக்கு இப்படி திடீர்  ப்ரோக்ராம் இடையில் வந்து புகுந்ததென்று சற்று கோபம்..

எஜமானர்களின் அடுத்த முகாம் திருவாரூர் என்பதால் ஆரூரனும் வேகமாக வந்து அருகிலிருந்த வாகனத்தில் ஏறிக்கொண்டு கான்வாயின் முன்னால் முந்திக்கொண்டு செல்ல..

சற்று நேரத்தில்..திருமலைராயன் பட்டினத்தில் அபிராமியம்மன் கோயிலில் பொது ஜனங்கள் வரவேற்பு,,

அப்போது ஒரு காவலர் ஆரூரனிடம்   "உங்களை காவல்துறை கண்காணிப்பாளர் அழைக்கிறார்" என்று கூப்பிட்டுப் போய் அருகில் இருந்த காவல் நிலையத்துக்குள் உட்கார்த்தி வைத்து விட்டார்..

அப்போதுதான், முன் அனுமதியின்றி  கான்வாயை இடையில் நிறுத்தி எசமானரை இறக்கி அழைத்துப்போனதாலும்..
பிறகு வாகனங்களை முந்திக்கொண்டு முன்னால் வேகமாகச் சென்றதாலும் மந்திரி உள்ளிட்ட ஓரிரு முக்கியஸ்தர்களுக்கும், காவல்துறைக்கு கண்காணிப்பாளருக்கும் கோபம் வந்து இப்படி உட்கார்த்தி வைத்துவிட்டார்கள் என்பது புரிந்தது..

ஆரூரனுக்கு இளம் வயது.. உள்ளூர் வ்யவஹாரமும் தெரியாது.. இப்போதுள்ளதைப் போல  செல் ஃபோன் முதலிய வசதிகளும் அப்போது கிடையாது.. கையில் காசு இல்லாமல் மேல் சட்டை அணியாமல் காவல் நிலையத்தில் அமர்ந்திருந்தபோது...
சற்று நேரத்திற்கெல்லாம் வாக்கி டாக்கி ஒலித்தது..

காவல்துறைக் கண்காணிப்பாளரிடமிருந்து உடனே ஆரூரனை வாழ்மங்கலம்  செக்போஸ்ட் அருகில் பத்திரமாக அழைத்துக்கொண்டு வரும்படி சொல்லப்பட்டது..

சில நிமிடங்களில் வாழ்மங்கலம் தமிழக எல்லைப்புறக் கண்காணிப்புச் சாவடிக்கு அழைத்து  வந்தார்கள்.. பக்கத்திலிருந்த பெரிய ஆலமரத்தடியில் எசமானர்கள் செல்லும் வாகனங்கள் நிற்பது கண்ணில் பட்டது..

நடந்தவற்றை எவரும் அவர்களிடம் சொல்லவில்லை.. என்றாலும் யாவற்றையும் உணர்ந்து  எல்லைச்சாவடி வந்ததும் வண்டிகளை நிறுத்திவிடச் சொல்லியிருக்கிறார்கள். ஆரூரனைத் திருப்பிக் கொண்டுவந்து தம்மிடம் ஒப்படைக்கச் சொல்லிவிட்டு அங்கேயே நின்றுவிட்டிருக்கிறார்கள்.. அதனால் உடன் வந்த எல்லா வாகனங்களும் அப்படியே சாலையோரமாக நின்றிருந்தன.

காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆரூரனை அழைத்துக்கொண்டுபோய்  எசமானர்களிடம் ஒப்புவித்தார்.. நடந்தவற்றுக்கு எசமானர்களிடம் வருத்தத்துடன் மன்னிப்பும்  கோரினார்..

ஆரூரனைக் கண்டதும்..
"அடுத்தது திருவாலூர்தான்..  ஓடிப்போய் முன் வண்டியில் ஏறிக்கோ.. முன்னாடி போ.." என்று  தமக்கேயுரிய  ப்ரகாசமான சிரிப்புடன் எசமான் சொன்னார்கள்...

இந்தச் சம்பவம் நடந்த ஆண்டு 1995..
எசமானர் தங்கக் கையால்  குங்குமத்தை அள்ளிப் போட்ட ஆரூரனின் அலுவலகம்  அவரது தெய்வ வாக்கின்படியே  பல்கித் தழைத்து பிற்பாடு.. 2005ல் எசமானருக்கு மாபெரும் வரவேற்பளித்ததும் நாம் ஏற்கனவே கண்டது...

விச்வரூப தர்சனம் : 1

Image may contain: 1 person, smiling, standing



2004 தீபாவளியன்று தர்மத்தின் வாழ்வை சூது கவ்வியிருந்த அந்த சமயத்தில் வேதபுரியான புதுச்சேரி மண்ணில் தர்மத்தை மீண்டும் வெல்ல வைக்க உள்ளூர் மக்கள் திரண்டனர்.
காரைக்கால் நகரில் முழுக் கதவடைப்பு..
கண்டன ஆர்ப்பாட்டம்.. பொதுமக்கள் நடத்திய மாபெரும் ஊர்வலம்...


பிற்பாடு 2005ம் ஆண்டு... சிதம்பரம் முகாம்.. ஆரூரனிடம்.. "இன்னும் இரண்டு நாட்களில் காரைக்காலுக்கு வரப்போகிறோம்.. ஆனதைச் செய்" என்று மட்டும் சொன்னார்கள்...

காரைக்கால் மாவட்டத்திற்கு எசமான் விஜயம் செய்தபோது....
அம்பகரத்தூர் தமிழகம்-புதுவை எல்லைப் பகுதியிலிருந்து அவர்களின் வாகனத்தின் முன்னும் பின்னும் சுழலும் விளக்குடன் சைரன் பொருத்தப்பட்ட இரு காவல்துறை வாகனங்கள்..


ஒவ்வொரு காவல் நிலையத்தையும் தாண்டுங்கால் அந்தந்தக் காவல்நிலையப் பொறுப்பாளர் நீண்ட விசில் ஒலித்தபடி ஸல்யூட் செய்தனர்..
திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேச்வர ஸ்வாமி ஆலயத்திலும் மற்ற இடங்களிலும் சட்டமன்ற உறுப்பினர்கள், நகரமன்ற மேயர், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றனர்...
ஸ்ரீமடத்திற்கென ஃப்ரெஞ்ச் அரசு சார்பாகப் பல நூற்றாண்டுகளாக வழங்கி வரும் அனைத்து பாரம்பர்ய மரியாதைகளுடன் எசமானரைப் போற்றி வணங்கினர்..

மீனவப் பஞ்சாயத்துகள் ஸ்ரீயவர்களின் வருகையை ஒட்டி எவரும் கடலுக்குப் போகக்கூடாதென்று விடுமுறை அறிவித்து அவர்களைத் தரிசிக்கத் திரண்டு வந்தனர்...

ஹரிஜனங்களும் உரிய மரியாதைகளுடன் தமது கிராமப்பகுதிகளுக்கு அழைத்துச் சென்று கொண்டாடினர்.. அவர்கள் சென்ற இடமெல்லாம் மக்கள் திரண்டு வந்திருந்தனர்...


எசமானரை வரவேற்கும் பொருட்டு "விச்வரூப தர்சனம்" என்ற ஒரே மாதிரியான தலைப்புடன் காரைக்கால் மாவட்டம் முழுவதும் பல வண்ணச் சுவரொட்டிகள்... அலங்கார வளைவுகள்.. இருபது அடி உயரம் கொண்ட அவர்களது திருவுருவப் படங்கள் என..யாவற்றையும்.. அனைத்து ஹிந்து இயக்கங்களைச் சார்ந்த இளைஞர்களும் சிட்டாகப் பறந்து நிறைத்தனர்..
சுனாமியால் பாதிப்புற்ற நாகூர்ப் பட்டினச்சேரி மீனவர்களின் மீள்குடியேற்றத்திற்கு ஸ்தலம் தந்துதவினார்கள். அந்த இடங்களைப் பார்வையிட்டருளினார்கள்.. தக்க தருணத்தில் எசமான் செய்த உதவியை மீனவ சமுதாய மக்கள் பணிவுடன் ஏற்றுப் போற்றினர்.

பிற்பாடு... வாஞ்சியூர் தேவஸ்தானத்திற்கு விஜயம்... சொத்துக்களைப் பார்வையிட்டுத் திரும்பிய சூழலில்.. நேரமின்மை காரணமாக அவர்களுக்குரிய பாரம்பர்ய தேவஸ்தான மரியாதைகளை விரிவாகச் செய்ய முடியாமற் போயிற்று..

ஸ்ரீகாரைக்கால் அம்மையார் திருக்கோயில் மணிமண்டபத்தில் உளுந்து இடக்கூட இடமில்லாத அளவுக்குக் கூட்டம்... சட்டமன்ற உறுப்பினர் AMH நாஜிம்.. அவ்வளவு இடர்ப்பட்ட காலத்திலும் 2004 சுனாமியின்போது ஸ்ரீமடம் சார்பில் எசமான் ஆற்றிய அரும் பணிகளைப் போற்றிப் பேசினார். 

அனைவருக்கும் ப்ரஸாதம் அளித்து அவர்கள் தங்கியிருந்த சுரக்குடி க்ராமத்திற்குத் திரும்ப இரவு வெகு நேரமாயிற்று...

அப்போது வாகனத்திலிருந்து இறங்கி வரும்போது "இரண்டே நாள்தானே டயம் கொடுத்தோம்.. பாவம்.. தூங்கியிருக்கக்கூட மாட்டா.... " என்று தமக்கேயுரிய மந்தஹாஸத்துடன் மெலிதாகத் தமக்குள் சொல்லிக் கொண்டே நடந்து வந்ததை அப்போது அருகிலிருந்த மஹாதேவ ஐயர் என்னும் ஓய்வு பெற்ற ஃப்ரெஞ்ச் அரசு அலுவலர் சொன்னார்..

மறுநாள் அதிகாலை.. " நாகபட்டிணம் வக்கீல் சாம்பசிவ ஐயர்.. பண்டகசாலை க்ருஷ்ணமூர்த்தி ஐயர்.. வக்கீல் NRS போன்ற அனுபவஸ்தர்கள் இருந்து நிர்வாஹம் பண்ணின தேவஸ்தானம்.. வாஞ்சியூர் எஸ்டேட்.. பெரீவாளுக்கு எப்டி மரியாதை பண்ணணும்கூட தெரீல.. அவசரத்ல ஏதோ தெரிஞ்ச மட்டும் பண்ணிட்டோம்.. இன்னும் எவ்வளவோ பெரீசா தங்களுக்குப் பண்ணியிருக்கணும்.. பெரீவா..." என்று சொல்லி மறுபடியும் எல்லா மரியாதைகளையும முன் வைத்து நமஸ்கரித்தபோது ஏற்றுக் கொண்டு ப்ரஸாதம் தந்தார்கள்...

அடுத்த முகாம் கோவிந்தபுரம்...

அங்கும் நல்ல கூட்டம்.. நீண்ட வரிசையில் காத்திருந்து குடும்பத்துடன் சென்று சற்று தள்ளியிருந்து நமஸ்கரித்தபோது... 

தம் அருகிலிருந்த ஒரு வங்கியின் முக்ய பொறுப்பாளரிடம் "இவனை உனக்குத் தெரியுமோ?" என்றார்கள்..
அவரும் உடனே "...." என்றதற்கு..
" அவன் இல்லே.. அவனுடைய தம்பி இவன்..
அவனுக்கு வ்யாபகம் ஜாஸ்தி..
உங்க எல்லாருக்கும் அவனைத்தான் தெரியும்..
இவனை யாருக்கும் தெரியாது..
இவன் நாங்க சொல்லாமல் வெளியில் வரமாட்டான்...
அந்த ஊர்ல Goverment Guest மரியாதையை எப்பவும் கொடுப்பா.. இப்பவும் கொடுத்தா.." என்று சொல்லிப் புன்னகைத்தார்கள்...