Thursday, September 24, 2015

ஸ்ரீராமநாம சம்பந்தம்..!



அன்று விடியற்காலை ஸ்ரீமடத்தில்.. ஸ்ரீபெரீவா சன்னதியின் முன்புறம் பக்தர்கள் விஸ்வரூப தர்சனத்திற்காகக் காத்திருக்கிறார்கள்..

மேனாவின் கதவு மெல்லத் திறக்கிறது.. பக்தர்களிடம் பரபரப்பு.. உற்சாகம்.. அனைவரும் தலையாரக் கும்பிட்டு பன்முறை நமஸ்கரிக்கின்றார்கள்..

ஸ்ரீபெரீவாளின் அருகில் அணுக்கத் தொண்டர்  ப்ரம்மஸ்ரீ வேதபுரி சாஸ்த்ரிகள்.. அன்றைய தினப் பஞ்சாங்கம் வாசிக்கிறார்..

ஸ்ரீபெரிவா பக்தர் கூட்டத்தின்மீது திருக்கண் சார்த்துகிறார்கள்.  எல்லோரும் படபடவென்று கன்னத்தில் போட்டுக்கொள்ளுகின்றனர்...

ஸ்ரீபெரிவா : (மெல்லிய குரலில் ப்ரம்மஸ்ரீ வேதபுரி சாஸ்த்ரிகளிடம்)
“இங்கே இருக்கறவாளில் எத்தனை பேருக்கு அவாளின் பேரில் ஸ்ரீராமருடைய சம்பந்தம் இருக்குன்னு கேளு.”
.
ப்ரம்மஸ்ரீ : (திரும்பி பக்தர்களை பார்த்து) “ இங்கே இருக்கறவாளில் எத்தனை பேருக்கு அவாளின் பேரில் ராமர் சம்பந்தம் இருக்குன்னு கேக்கச்சொல்லி பெரீவா உத்தரவு.. ஒவ்வொருத்தரா சொல்லுங்கோ..”

உடன் அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஒவ்வொருவராக தத்தம் பெயர்களைச் சொல்லுகிறார்கள்.. 

ராமஸ்வாமி, ராமக்ருஷ்ணன், ஸ்ரீராமன், ராமச்சந்திரன். ராமநாதன், ராமமூர்த்தி..“ என்று பெயர் வரிசை நீண்டு கொண்டே போகிறது...

என்ன மாயமோ..” அத்தனை பேரும் ஆச்சர்யத்துடன் பேச்சின்றி நிற்கின்றார்கள்.

கூடியிருந்தவர்கள் அத்தனை பேர் பெயர்களிலும் ஸ்ரீராம சம்பந்தம் இருக்கிறது.. அங்கிருந்த ஒரு பையனைத் தவிர...   

ப்ரம்மஸ்ரீ :  “ உம் பேர் சொல்லுப்பா”

பையன் தன் பெயரைச் சொல்லுகிறான்.. அந்தப் பெயரில் ஸ்ரீராம சம்பந்தம் இல்லை..

ஸ்ரீபெரிவா : “ எல்லார் பேரிலுமா ஸ்ரீராம சம்பந்தம் இருக்கு ?”

ப்ரம்மஸ்ரீ : “ ஒரு பையனைத் தவிர எல்லார் பேரிலுமே ஸ்ரீராம சம்பந்தம் இருக்கு பெரீவா..

ஸ்ரீபெரிவா : (அந்தப் பையனைக் காட்டியபடி)
“அவனா..? அவனுக்கும்  ஸ்ரீராமருடைய சம்பந்தம் இருக்கு..”

ப்ரம்மஸ்ரீ ஒரு கணம் திகைத்துப்போகிறார்..

ப்ரம்மஸ்ரீ : “ இவன் பேரில் ராமர் வரலியே பெரியவா. எப்டி சம்பந்தம் இருக்குன்னு எனக்கு தெரீலே.”

ஸ்ரீபெரிவா : (சிறு புன்னகையுடன்)“அவன் தாத்தா பேர் உனக்குத் தெரியுமோ?”

ப்ரம்மஸ்ரீ : “ தெரியும்.. திருவாலூர் ஆடிட்டர் வெங்கட்ராமையர் “

ஸ்ரீபெரிவா : “ தாத்தா பேரை வெச்சுக்கரதுனால தான் பேரன்னு சொல்றோம். தாத்தா பெயரைக் கொண்டவன்.. பெயரன் .. கூப்படரச்சே பெயரன் மாறி  பேரன்னு ஆயிடுத்து.. அதனால் வெங்கட்ராமையர் பேரன் என்பதாலும்.. (என்பதாலும் என்று அழுத்திச் சொல்லுகிறார்கள்) இவனுக்கும்   ஸ்ரீராம சம்பந்தம் இருக்குன்னு சொன்னேன்.”

[இதன் பிறகு சில நாட்கள் கழித்து என் தகப்பனாரிடம் இந்த சம்பவத்தைச் சொன்னேன்.. சொல்லி முடித்ததும் பட்டென்று என் தலையில் குட்டிக் கேட்டார் அப்பா..

”...ஏம்ப்பா. உனக்கு  ஸ்ரீராமசர்மான்னு நாமகரணம்  பண்ணினது  மறந்து போச்சா?”]



1 comment: